முருகன் காலடியில் பொக்கிஷம்.. 5 லட்சத்துக்கு ஏலம் போன ஒரே எலுமிச்சைப் பழம்! மெய்சிலிர்த்த பக்தர்கள்
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் முருகன் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழம் 5 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடந்தது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கடந்த 11ஆம் தேதி மாலை தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர்.
மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டனர்.
இதே போல காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் குழு குழுவாக வந்து முருகப்பெருமானை தரிசித்தனர். அந்த வகையில் காரைக்குடி நகரத்தார், புதுக்கோட்டை வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப் பூச திருநாளை கொண்டாடும் வகையில் பழனியில் தங்கியிருந்து தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூசத்தை முன்னிட்டு பழனியிலேயே மூன்று தினங்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டும் வழக்கம் போல முன்னூறுக்கும் மேற்பட்டோர் பழனிக்கு சென்று தைப் பூசத்தை விமர்சையாக கொண்டாடினர். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அன்னதானம் வழங்குவதோடு சுவாமி தரிசனம் செய்யும் போது எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டும் முருகன் காலடியில் வைத்து எலுமிச்சம்பழம் பூஜிக்கப்பட்டது. அந்த எலுமிச்சம் பழம் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்கு சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது.
அந்த ஏலத்தில் திருவரங்குளம் வடநாட்டு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க முடியும். இந்த நிலையில் இந்த ஏலத்தில் காலை உணவு, இரவு உணவு, மதிய உணவு உள்ளிட்ட உணவுகள் சமைத்து அன்னதானம் வழங்கியபோது பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை மூலம் 16,000 முதல் 40,000 ரூபாய் வரை ஏலம் போனது.
இதை அடுத்து ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தை முன்னிட்டு முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட அபிஷேக எலுமிச்சைப் பழம் ஏலத்தில் விடப்பட்டது. அந்த எலுமிச்சம் பழத்தை எப்படியாவது ஏலம் எடுத்து விட வேண்டுமென கடும் போட்டி ஏற்பட்டது. ஆயிரம் ரூபாயில் தொடங்கிய ஏலம் 2 லட்சம் மூன்று லட்சம் நான்கு லட்சம் வரை அதிகரித்துக் கொண்டே சென்றது. இதையடுத்து இறுதியாக அதில் ஒரு பக்தர் அந்த எலுமிச்சம் பழத்தை 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.












Click it and Unblock the Notifications