பழனி முருக பக்தர்களுக்கு செம அறிவிப்பு.. 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து! இலவச பேருந்துகள் இயக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப் பூச விழா வெகுவிமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், பழனி வரும் பக்தர்கள் ஊர் திரும்ப பத்து நாட்களுக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுமென தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது.

இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர்.
இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தைப்பூச திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக தமிழகம் முழுவதும் இருந்து பழனிக்கு வருகை தருகிறார்கள். அதன்படி பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பழனிக்கு பக்தர்கள் நடந்து வரும் சாலையை சரி செய்து வைக்க வேண்டும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை திருச்சி ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தினர்.
தைப்பூச திருவிழா வருகிற 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடத்திக் கொடுத்த ஒத்துழைப்பு வழங்க அனைத்து துறை அதிகாரிகளையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,"பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா மற்றும் அதற்கு முந்தைய நாள் அடுத்த நாள் என மூன்று நாட்களுக்கு மலைக் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்ட பக்தர்கள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தைப்பூசத் திருவிழாவின் போது பழனிக்கு வரும் பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் பாதி அளவிலான பேருந்துகளில் இலவசமாக பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். பழனி தைப்பூச திருவிழாவில் அறநிலைய துறை சார்பில் தினமும் இருபதாயிரம் பக்தர்களுக்கு என இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications