பள்ளி குழந்தைகள் பத்திரம்.. சிறுவனை கடத்த முயன்ற அசாம் இளைஞர்! புரட்டியெடுத்த மக்கள்.. பரபர பழனி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு மாணவனைக் கடத்திச் செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே குழந்தை விற்பனை சம்பவங்களும், குழந்தை கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள்.
பெரும்பாலும் வட மாநிலத் தொழிலாளர்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

குழந்தை பாதுகாப்பு
குறிப்பாக தொழில் நகரங்களில் அதிக அளவில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் அவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பழனி அருகே பள்ளிக்குச் சென்ற மாணவனைக் கடத்த முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவன்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மயிலாடும்பாறை, வள்ளி நகரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த வட மாநிலத்தைச் சார்ந்த ஒருவன் சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த நிலையில், திடீரென சிறுவனின் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கடத்திச் செல்ல முயன்றுள்ளான். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுவன் அழுதுகொண்டே கூச்சலிட்டுள்ளான்.
கடத்தல் முயற்சி
கூச்சலிட்ட சிறுவனின் முகத்தில் எச்சிலைத் துப்பியுள்ளார் அந்த இளைஞர். பின்னர் சிறுவன் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் வந்து சிறுவனை மீட்க முயன்ற பெண்களைத் தள்ளிவிட்டுச் சென்றபோது, பொதுமக்கள் கூட்டம் கூடி வடமாநில நபரைத் தாக்கி, கட்டி வைத்தனர். பின்னர் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் வட மாநில இளைஞர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான கனு சர்கார் என்பது தெரியவந்தது.
அசாம் இளைஞர்
இதனை அடுத்து வட மாநில இளைஞரை அடிவாரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பள்ளிக்குச் சென்ற சிறுவனை வட மாநில இளைஞர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இவர் மனநலம் பாதித்தவர் என்றும் மதுபோதையில் இருந்தார் என்றும் தெரியவந்துள்ளது என்கின்றனர் போலீசார்.
சிசிடிவி காட்சி
இந்த நிலையில் பிரச்சனையைத் திசை திருப்ப போலீசார் முயல்வதாகக் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதிவாசிகள். சிறுவனைப் பின்தொடர்ந்து வந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் நிலையில் அவர் மனம் பாதிக்கப்பட்டவர் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பும் பொதுமக்கள், அவர் எங்கு பணியாற்றினார்? அவரை அழைத்து வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications