முருகன் எங்க வீட்டு மருமகன்.. வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்! பழனியை தெறிக்க விட்ட குறவர் இன மக்கள்!
திண்டுக்கல்: தைப்பூசத் திருவிழாவை யொட்டி முருக பெருமானை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனமாக, குறவர் இன மக்கள் பாரம்பரிய முறையில் தேன், தினை மாவு உள்ளிட்டவற்றுடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் ஆடிப்பாடி சீர்வரிசைகளை கொண்டு சென்றனர். வேடன் வேடமிட்டு முருகன் வள்ளியை மணந்ததை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் இந்த நிகழ்வு நடக்கிறது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகாலமாக நடந்தது. தைப்பூச திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழாவாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசம் கடந்த 11ஆம் தேதி மாலை தேரோட்டத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்தனர்.
மலை அடிவாரத்தில் மயில் காவடி, இளநீர் காவடி, பால் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தியும் பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க யானை பாதை வழியாக மலை மீது அனுப்பி வைக்கப்பட்டு, சாமி தரிசனம் அளிக்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே அனுப்பப்பட்டனர்.

இதே போல காரைக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் குழு குழுவாக வந்து முருகப்பெருமானை தரிசித்தனர். அந்த வகையில், ஆண்டு தோறும் தைப்பூசத் திருவிழாவையொட்டி முருக பெருமானை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனமான குறவர் இன மக்கள் சார்பில் சீர்வரிசை வழங்கப்படுவது வழக்கம். தைப் பூசத் திருவிழாவின் போது அருள்மிகு முத்துக் குமாரசாமி-வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில் குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும் - முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்த வீடான குறவர் இன மக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது. இதன்படி தமிழகம் மற்றும் கேரளா மாநிலம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனி முருகனுக்கு தாய் வீட்டு சீதனத்தை கொண்டு சென்றனர்.

இதில் தேன், திணைமாவு, மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவற்றை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இவை அனைத்தும் முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது. சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊர்வலத்தின் முன்பு மேளம், இசை முழங்க சிறுவர் - சிறுமிகள் வேடன் - குறத்தி போன்று வேடமிட்டு ஆடி அடிவார பகுதிக்கு வந்தனர். குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியும், பாரம்பரிய ஆட்டம் ஆடியும் பாடல்கள் பாடியும் வழிபாடு செய்தனர். இந்நிலையில், தைப் பூசத் திருநாள் 10 நாள் திருவிழா முடிந்து 12 வது நாள் குறவர் இன மக்களுக்கு ஒரு நாள் பழனி மலைக் கோவில் தங்கி வழிபட அனுமதிக்க வேண்டுமென குறவர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications