மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி திண்டுக்கல் வருகை- ஆளுநர், முதல்வர் வரவேற்பு!
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகை தந்தார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராமம் வந்தடைந்தார். பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்றும் நாளையும் பங்கேற்பதற்காக தென்னிந்திய மாநிலங்களுக்கு வருகை தந்தார். இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் பிரதமர் மோடி. பின்னர் பெங்களூரில் இருந்து மதுரைக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.

ஹெலிபேட்
பிரதமர் மோடி மதுரையில் இருந்து காந்தி கிராமம் பல்கலைக் கழகத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார். இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டு ஒத்திகைகளும் பார்க்கப்பட்டன. அதேநேரத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்வார் என கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அம்பாத்துரை ஹெலிகாப்டர் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

சாலை மார்க்கம்- மாற்று ஏற்பாடுகள்
பிரதமர் மோடி சாலை மார்க்கமாக திண்டுக்கல் செல்லக் கூடும் என திட்டமிட்டு மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மிகப் பெரிய அளவு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது மதுரையில் இருந்து திண்டுக்கல், திண்டுக்கல் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அலங்காநல்லூர், நத்தம் வழியாக செல்ல வேண்டும்; மதுரை, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை. காந்தி கிராமம் வழியாக மதுரை செல்லும் அனைத்து வாகனங்களும் தோமையார்புரம் தொடங்கி வத்தலகுண்டு- தேனி சாலையில் அம்மையநாயக்கனூர் சோதனைச்சாவடி வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஹெலிகாப்டர் மூலமாகவே திண்டுக்கல் சென்றார் பிரதமர் மோடி

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், கரூரில் இருந்து சாலை மார்க்கமாக காந்தி கிராமம் செல்கிறார். முன்னதாக கரூரில் நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

போலீஸ் குவிப்பு
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை- திண்டுக்கல் நெஞ்சாலையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்பு படை
திண்டுக்கல், காந்திகிராமம், சின்னாளப்பட்டி, அம்பாத்துரை ஆகியவை பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக வளாகம் மத்திய பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காந்திகிராம பல்கலைக்கழக வளாகம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications