இரட்டை இலை! விட்டு தரமாட்டோம்! மாயதேவர் தெரியுமா? ஓபிஎஸ்க்கு ஆதரவாய் முக்குலத்தோர்? பதறிய ர.ர.க்கள்!
திண்டுக்கல் : அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 23ஆம் தேதி அதிமுக தொண்டர்கள் யாரும் இந்த நாளை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது என்பதுபோல பரபரப்புகள் விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லாமல் 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த அரசியல் நாடகம் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவடைந்துள்ளது.
ஒற்றைத் தலைமை கோரிக்கை தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்திற்குள் எழுந்த மோதல், அதிரடி பேட்டிகள், அறிக்கைகள், பேச்சுவார்த்தைகள், காவல்துறை, நீதிமன்ற வாதங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு பொதுக்குழு கூட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

அதிமுக பொதுக்குழு
சுமார் 2,600 பேர் கலந்து கொண்டு இருந்த அதிமுக பொதுக்குழுவில் முன்னெப்போதும் சந்தித்திராத பலத்த அவமானங்களையும் எதிர்ப்புகளையும் ஒருசேர சந்தித்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திய பன்னீர்செல்வத்தை தொண்டர்களில் வெளியே போ! ஓபிஎஸ் ஒழிக என முழக்கமிட்டதோடு அவர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசி துரத்தினர்.

ஓபிஎஸ்க்கு ஆதரவு
இதனையடுத்து அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

திடீர் போஸ்டர்கள்
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை வாங்கியதே நாங்க தான் என திண்டுக்கல்லில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசனின் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களை சுற்றிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இரட்டை இலை சின்னம் வாங்கிக் கொடுத்ததே நாங்க தான், 'எவனுக்கும் அஞ்ச மாட்டோம், எவனுக்கு விட்டுத் தர மாட்டோம்' என மாயத்தேவர் புகைப்படத்துடன், மாநில முக்குலத்தோர் பாசறை சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

மாயத்தேவர் ஆதரவு
1972 அக்டோபர் 17-ம் தேதி, அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கப்பட்டு இன்று 46 ஆண்டுகளாகிவிட்டன. 47-வது ஆண்டு தொடக்க விழா, கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடந்தது. இந்த நிலையில், முதல் முதலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், மாயத்தேவர். அதன்பின்னர் தான் அதிமுக வசம் இரட்டை இலை வந்தது. அவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் ஆதரவாளர்கள் போஸ்டரை இரவோடு இரவாக கிழித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications