பழனி:ஆளுநர் ரவிக்கு கறுப்பு கொடி-டிஎஸ்பி மீது பாஜக தாக்குதல்- இன்ஸ்பெக்டர் உடந்தை என சிபிஎம் புகார்!
திண்டுக்கல்: பழனியில் ஆளுநர் ரவிக்கு "இந்தியா" கூட்டணி சார்பாக இன்று கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநருக்கு வரவேற்பு அளிப்பதாக கூறி கொடிகளுடன் வந்த பாஜகவினர் டிஎஸ்பி சரவணனை தாக்கியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) குற்றம் சாட்டி இருக்கிறது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பழனிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி வருகை தருவதையொட்டி INDIA அணி சார்பில் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் சச்சிதானந்தம் விசிக மேற்கு மாவட்ட செயலாளர் திரு திருவளவன் பழனி நகர மன்ற முன்னாள் தலைவர் வி ராஜமாணிக்கம் கே அருள்செல்வன் எம் ராமசாமி எஸ் கமலக்கண்ணன் பழனி நகர மன்ற துணைத் தலைவர் கே கந்தசாமி பி செல்வராஜ் என் கனகு இந்திய தேசிய காங்கிரஸ் நகர தலைவர் முத்து விஜயன், மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அஜ்மல் கான் முஸ்லிம் லீக் நகரத் தலைவர் முகமது யாசின் விசிக நகர செயலாளர் மணவாளன் செய்தி தொடர்பாளர் பொதி்னிவளவன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கமிட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் பாஜகவினர் தேசியக் கொடியுடன் கூடிய எதிர் முழக்கமிட்டனர். பாஜகவினர் வரவேற்பு அளிக்க வேண்டும் என்றால் வேறு இடத்திற்கு சென்று வரவேற்ப்பளிக்கலாம் எதற்காக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்திற்கு வருகிறார்கள் கலவரத்துக்கு வித்திடும் பாஜகவினரை கைது செய்யுங்கள் என முழக்கமிட்டனர். ஆனால் காவல்துறை INDIA அணியினரை கைது செய்தனர்.

பாஜகவினரை கலைந்து போக சொல்லியபோது தகராறு செய்து பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணனை தாக்கினர்.. தொடர்ந்து பாஜகவினருக்கு ஆதரவாக செயல்படும் பழனி நகர காவல் ஆய்வாளர் உதயகுமார் டிஎஸ்பி தாக்கப்பட்ட போது தலைமறைவாகி விட்டார். INDIA அணியினரை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுப்பதற்கு பெரும் முயற்சி எடுத்த பழனி நகர காவல் ஆய்வாளர் பாஜகவினரை அப்புறப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கருப்பு கொடி ஆர்பாட்டம் நடந்த இடத்திலே வரவேற்பு அளிப்பதற்கும் அனுமதி அளித்தது அவர்தான் எனவும் சொல்லப்படுகிறது. ஆளுநரை வருகை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இதுபோல் எதிர்ப்பு போராட்டங்கள் பல இடங்களில் அமைதியாக நடந்துள்ளன. ஆனால் பழனி நகரத்தில் பழனி காவல் ஆய்வாளர் உதயகுமார் பாஜகவினரை தூண்டிவிட்டு சட்டம்ஒழுங்கு பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்திருக்கிறார். கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய INDIA அணியினரை கைது செய்த காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளரை தாக்கிய பாஜகவினரை விடுதலை செய்து ஆளுநருக்கு வரவேற்பு அளிக்க அனுப்பி உள்ளனர்.

இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன்,பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளரை தாக்கிய பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட அவர்களை கைது செய்வதோடு பழநி நகர காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை சிபிஎம் திண்டுக்கல் மாவட்ட குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications