குடும்ப ஆட்சியால்.. இலங்கை நிலைமை தமிழகத்திற்கும் வரும்.. சொல்கிறார் "இந்து தமிழர் கட்சி " தலைவர்
திண்டுக்கல்: ஸ்டாலின் ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அல்ல, ராஜபக்சே மாடல் ஆட்சி என ஹிந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக இந்து மதம் சார்ந்த விஷயங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம், கோசாலைகள் அமைப்பு, ஆம்பூரில் பிரியாணி திருவிழா என இந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இந்து அமைப்புகள் பலவும் தமிழக அரசுக்கு எதிராகப் பேசி வருகின்றன.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ராம.ரவிக்குமார், "சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்கும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். ஓமந்தூரார் பெயரை மாற்றி, கருணாநிதியின் பெயரை சூட்டுவதற்கான முன் முயற்சியாக இது இருக்கலாம்.
இலங்கையில் குடும்ப ஆட்சியால் பொருளாதார சீரழிவு உருவாகியுள்ளது. தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அரசியலால் சிக்கல் உருவாகலாம். இது திராவிட மாடல் அரசு அல்ல. ராஜபக்சே மாடல் அரசு." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி சாலை எனப் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், அதிகுறித்து பேசிய ராம்.ரவிக்குமார், திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்க முயற்சிப்பதை எதிர்க்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசு மீது தொடர்ந்து வரும் சர்ச்சைகள் குறித்துப் பேசியுள்ள அவர், பசுமாடுகளை காப்பதற்கு ஒருபுறம் கோசாலைகள் அமைத்துவிட்டு, மறுபுறம் மாட்டுக்கறி பிரியாணி விழா நடத்துவது என்பதெல்லாம் ஏமாற்று வேலை என விமர்சித்துள்ளார்.