20 லட்சம் கடனை ஒரே நாளில் அடைக்க யூ-டியூப் பார்த்து திட்டம்.. அமர்நாத்துக்கு ஆப்பு வைத்த அலாரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் கேரளாவை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனத்தில், அதன் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொது மக்கள் மடக்கி பிடித்தனர். யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க திட்டமிட்ட பட்டதாரி இளைஞர்கள் சிறையில் கம்பி எண்ணுகிறார்.
ஒரே நாளில் தங்கள் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும்...ஒரே வருடத்தில் தான் வாங்கி கடன் அனைத்தையும் அடைத்துமுடித்துவிட வேண்டும். மிகவேகமாக கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்..இன்றைய இளைஞர்கள்.. சூரிய வம்சம் படத்தில் வருவது போல் ஒரே பாட்டில் கோடீஸ்வரன் எல்லாம் ஆக முடியாது.. ஒரே நாளில் கொள்ளைக்காரனாக வேண்டுமானால் மாற முடியும்.

கொள்ளைடியத்தாவது தங்கள் பிரச்சனையை தீர்க்க சிலர் ஆசைப்படுகிறார். அது அவர்களுக்கு மிகப்பெரிய பாடத்தையும் , சிறை அனுபவத்தையும் கற்றுக்கொடுக்கிறது. குறிப்பாக யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க வருவதும் இப்போது நடக்கிறது. நாம் பார்க்க போகும் நபரும் யூடியூப் பார்த்து தான் கொள்ளையடிக்க முயற்சித்து கையும் களவுமாக சிக்கி உள்ளார்..
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் பெரிய பள்ளிவாசல் எதிரில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தின் முதல் மாடியில் நகை கடன் வழங்கும் மணப்புரம் என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தான் வத்தலக்குண்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்று செல்வது வழக்ககம்.
திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வணிக வளாகத்துக்குள் புகுந்தார். பின்னர் நிதி நிறுவனத்தின் மெயின் ஷட்டர் பூட்டை அவர் திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அந்த வளாகத்தின் மாடி பகுதியில் மறைந்து இருந்தார். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணி அளவில் நிதி நிறுவனத்தின் ஒரு பெண் ஊழியர் உள்பட 3 ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளார்கள். அவர்களிடம் சாவி இல்லை..
ஆனால் நிதி நிறுவனத்தின் மேலாளரிடம் தான் சாவி இருந்தது. அவர் வேலைக்கு அப்போது வரவில்லை.. இதனால் நிதி நிறுவனம் திறக்கப்படாமல் இருந்தது. அவர்கள் வெளியே காத்திருந்தனர். அப்போது மாடி பகுதியில் மறைந்து இருந்த அந்த மர்ம நபர் அங்கு வந்து நின்றார். இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.. இந்நிலையில் அந்த மர்ம நபர் கத்தியை காட்டி கதவை திறக்கும்படி மிரட்டினார். ஊழியர்கள், மேலாளரிடம் சாவி இருப்பதாக கூறியுள்ளார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர், ஊழியர்களின் கைகளை கயிற்றால் கட்டினார்.
பின்பு அந்த நிதி நிறுவன ஷட்டர் கதவின் பூட்டை மர்ம நபர் உடைக்க முயன்றுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை அலாரம் மணி ஒலிக்க தொடங்கியது. அபாய ஒலி ஒலித்ததால் உடனே கதவின் பூட்டை உடைக்காமல், அந்த மர்ம நபர் நிதி நிறுவன கட்டிடத்தின் மாடியில் இருந்து இறங்கி வெளியே ஓட முயன்றார்.. அப்போது ஊழியர்கள் திருடன், திருடன் என்று கூச்சலிட்டனர்.
இதை பார்த்த பொதுமக்கள் மர்ம நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தார்கள். பின்னர் நிதி நிறுவனத்துக்குள் சென்று பொதுமக்கள் பார்த்தனர். அப்போது அங்கு ஊழியர்களின் கைகள் கட்டப்பட்டு இருப்பதை பார்த்து கட்டுகளை அவிழ்த்து விட்டனர். இதையடுத்து பிடிபட்ட நபரை வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தார்கள். இதுபற்றி தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் நேரில் வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பிடிபட்டவர் கொடைரோட்டை சேர்ந்த அமர்நாத் (வயது 25) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரி, அம்மையநாயக்கனூரில் செல்போன் கடை நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர். அலாரம் ஒலித்ததால் நிதி நிறுவனத்தில் இருந்த சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போகாமல் தப்பியது. வத்தலக்குண்டுவில் உள்ள இந்த நிதி நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்கனவே பல கோடிரூபாய் மதிப்பிலான நகைகள் திருடு போனது. அதனை போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் மீட்டிருந்தனர்
இதனிடையே நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்க முயன்ற அமர்நாத் போலீசாரிடம் கூறுகையில், 'என்னுடைய அம்மா ரூ.20 லட்சம் கடன் வாங்கி விட்டு வெளியூர் சென்று விட்டார். அவர் வாங்கிய கடனை அடைப்பதற்காக யூ-டியூப் மூலம் எப்படி கொள்ளை அடிப்பது என்று பார்த்தேன்.. அதன்படி தேவையான கருவிகளை வாங்கினேன். பின்னர் வத்தலக்குண்டுவில் உள்ள நிதி நிறுவனத்தை தேர்வு செய்து வந்தேன்.. ஆனால் மாட்டிக்கொண்டேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications