ஸ்டாலின் வண்டி வருது.. கொடைக்கானலில் சைக்கிளிங் செய்த முதல்வர்.. பொதுமக்கள் உற்சாகம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஏரி சாலையில் சைக்கிள் சவாரி செய்தார். முதல்வருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியானது. அப்போது முதல் தமிழக தேர்தல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகளை முடித்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறங்கினர். தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி துர்காவுடன் சென்றுள்ளார். அவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாம்பர்புரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளும் முதல்வரை சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் ஸ்டாலின், காலை வேளைகளில் ஏரி சாலையில் பலத்த பாதுகாப்புடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நேற்று கொடைக்கானல் ஏரிச் சாலையில் நடைபயிற்சி செய்த ஸ்டாலின் சுற்றுலாப் பயணிகள், துப்புரவு பணியாளர்கள், உள்ளூர் வாசிகள், கடை வியாபாரிகள், என அனைவரையும் சந்தித்து அவர்களிடம் உரையாடினார்.
பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அனைவரிடமும் இயல்பாக பேசி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஏரி சாலையில் சைக்கிளிங் செய்தார் முதல்வர் ஸ்டாலின். முதல்வருடன் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா மற்றும் குடும்பத்தினர் நேற்று நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தபடி, இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும், கொடைக்கானலில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயிலில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்று அம்மனை தரிசனம் செய்தார்.
முதல்வர் ஸ்டாலின் தங்கியுள்ள தனியார் நட்சத்திர விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பும் வரை, கொடைக்கானல் நகர் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications