போராட்டம் வாபஸ் இல்லை.. நாளை மாலை 6 மணி வரை வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை இல்லை! மருத்துவர்கள் உறுதி!
திண்டுக்கல்: சென்னையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் இல்லை எனவும், தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் ஆர்.எம். காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத்தின் மாநில செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்," அரசு மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே கொல்கத்தா மருத்துவர் தாக்கப்பட்ட போதே இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.
இதற்கான பல நெறிமுறைகள், பல வழிமுறைகளை சங்கம் சார்பில் அரசாங்கத்திடம் கொடுத்திருந்தோம். அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். உடனடியாக அவுட் போஸ்ட் கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிக அவுட் போஸ்ட் உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் பாதுகாவலர்கள் வைக்க வேண்டும்.
பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் அதிக அளவில் வேலை செய்கின்றனர். இது குறித்து பல முறை கோரிக்கைகள் வைத்துள்ளோம். இதனை தமிழக அரசாங்கம் உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது கிண்டி மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தினம்தோறும் அரசு மருத்துவமனைக்கு ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வருகின்றனர்.
இழப்பு என்பது யாராலும் தாங்க முடியாது. மருத்துவமனையில் இழப்பு என்பது நடக்க கூடியது. உணர்ச்சிவசத்தில் உடன் இருப்பவர்கள் மருத்துவர்களை தாக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் வெளி நோயாளிகள் புறக்கணிப்பு நடத்தி வருகிறோம். அவசர சிகிச்சை நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது புற நோயாளிகள் பிரிவு புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளோம்.
தனியார் மருத்துவ சங்கமான இந்திய மருத்துவ சங்கத்திலும் (IMA) இந்த கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், நாளை அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் கடுமையாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பாக ஜாமீன் இல்லாத அளவிற்கு வழக்குகள் போடப்படும். தற்போது உணர்ச்சி பூர்வமாக நடத்தக்கூடிய நிகழ்வுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். பொதுமக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும்.
100% மருத்துவர்களிடம் அணுகுபவர்கள் உயிர் பிழைக்க முடியும் என கூற முடியாது. தற்போது நடந்துள்ள சம்பவம் மிகவும் கொடூரமாக உள்ளது. இது பாதுகாப்பு இல்லாத நிகழ்வாக உள்ளது. அரசாங்கத்தில் போதுமான மருத்துவர்கள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு புதிதாக மருத்துவர்கள் வேலைக்கு அமர்த்துவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்." எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications