பழைய ஓய்வூதியமா? அது கெடக்கு.. நீங்க செல்ஃபி எடுங்க டீச்சர்! ஆசிரியர் போராட்டத்தில் அரங்கேறிய காமெடி
திண்டுக்கல்: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) திண்டுக்கல் மாவட்டம் சார்பாக பழைய ஓய்வூதிய திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலில் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருக்க ஆசிரியர்கள் மரத்தடிகளில் தஞ்சம் புகுந்ததோடு, டூர் வந்தது போல் ஹாயாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோ, அரசு ஊழியர் கூட்டமைப்பு, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழக தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படும் எனவும் அறிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நாளுக்கு நாள் அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிரமாகி வரும் நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது. இதற்கிடையே தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் திண்டுக்கல் யூனியன் அலுவலக சாலையில் உள்ள ப்ரஸ் கிளப் முன்பு தொடங்கியது.
தொடங்குவதற்கு முன் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் தங்களின் கோரிக்கை குறித்து பேசிக் கொண்டிருந்த நிலையில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்கள், நிர்வாகிகளின் பேச்சுக்கு செவி கொடுக்காமல் தங்களது செல்போனை எடுத்து சமூக வலைதளங்களை பார்வையிட்டு வந்தனர். சிலர் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர நிர்வாகிகள் பேச்சைக் கேட்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க ஒருவரை ஒருவர் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் ஆசிரியர்கள் குழுவாக நின்று குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். ஒருபுறம் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த கோரிக்கைகள் என்னவென்று கேட்காமல் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் ஆர்வமின்மையை காட்டுவதாக இருந்தது.
இந்த போராட்டம் காரணமாக திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஆதார் அடையாள அட்டை அப்டேட் செய்யச் சென்றவர்கள், அரசு திட்டங்களை மனுவாக கொடுக்க சென்றவர்கள் அவதிப்பட்டனர். மேலும் யூனியன் சாலையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலக குடியிருப்புகளுக்கு செல்பவர்களும் சுமார் 2 மணி நேரம் மிகவும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications