திண்டுக்கல் இளைஞரின் கடைசி ரீல்ஸ்.. 'அவள் வேண்டாம் என்று சொல்ற அளவுக்கு, காதலிக்க வேண்டாம்'
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர், இளம்பெண் ஒருவரை ஒரு தலையாக காதலித்தார். அவர் எப்படியும் காதலை ஏற்பார் என்று நம்பிக்கொண்டு, கற்பனை வானில் பறந்தார். ஆனால் அந்த பெண் காதலை ஏற்கவில்லை.. இதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞர் செய்த காரியம் பொதுமக்களை அதிர வைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
காதல் குறித்த புரிதல் இன்றைக்கு பலருக்கும் இல்லை.. சினிமா படங்களை பார்த்து இதுதான் காதல் என்று நினைத்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள். கண்டதும் காதல், பழகினால் காதல், சிரித்தால் காதல், தன்னை திரும்பி பார்த்தால் காதல், உதவி செய்தால் காதல் என்று காதல் குறித்து தவறான புரிதல்களை சினிமா கற்றுக்கொடுத்துள்ளது. அதேபோல் ரவுடித்தனமாக இருப்பவர்கள், முரட்டுத்தனமாக இருப்பவர்களை காதலிப்பது போன்ற பல தவறுகளையும் சினிமா கற்றுக்கொடுத்துள்ளது. இதை நம்பி காதலில் இறங்கி வாழ்க்கையை பல இளைஞர்கள், இளம் பெண்கள் தொலைக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 19 வயது வாலிபர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர், மீனா என்ற பெண்ணை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலையாக காதலித்தார்.
எப்படியாவது காதலை சொல்லி மீனாவை நேசிக்க வைத்து விட வேண்டும் என்பதில் கார்த்திக் ஆர்வமாக இருந்தார். அதன்படி ஒரு நாள், மீனாவை, இளைஞர் கார்த்திக் சந்தித்தார். அப்போது, மீனாவிடம் தான் உருகி உருகி நேசிப்பதாக கூறினார். ஆனால் மீனா கார்த்திக்கின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. உதாசினப்படுத்தி அவரது காதலை உதறி தள்ளினார்.
உயிரை விட மேலாக நேசிக்கும் தனது காதலை, காதலி ஏற்றுக்கொள்வாள் என்று எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் அந்த இளைஞர் நொந்து போனார். மனம் உடைந்து விரக்தி அடைந்த கார்த்திக், அடுத்த செய்த காரியம் பலரையும் அதிர வைத்துள்ளது,.
வேலைக்கே போகாமல் ஒரே ஐடியாவில் 88 லட்சம் சம்பாதித்த திண்டுக்கல் வாலிபர்.. ஏமாந்த தேனி பெண்
காதல் தோல்வி அடைந்த அந்த இளைஞர், சோகத்தை வெளிப்படுத்தும் வகையில், இன்ஸ்டாகிராமில் காதல் தோல்வி தொடர்பான சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் நடித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.. ஆனாலும் இளம் பெண் மீனா காதலை ஏற்கவில்லை.. இளம்பெண்ணின் நினைவில் வாழ்ந்த கார்த்திக், இனி தன்னை நேசிக்கவே மாட்டாள் என்பதை உணர்ந்து தவறான முடிவெடுத்தார்.
நேற்று முன்தினம் அய்யலூர் வனப்பகுதிக்கு கார்த்திக் சென்றுள்ளார். அங்கு 2 வீடியோக்களை எடுத்து, தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில், காதலர்கள் கவனத்துக்கு, நான் லவ் பெயிலியர். என் நிலைமை உங்களுக்கு வரக்கூடாது, காதலிக்க வேணாம் என்று சொல்லவில்லை. அவள் வேணாம் என்று சொல்ற அளவுக்கு, காதலிக்க வேணாம் என்று கூறுகிறார். 21 வினாடி உள்ள வீடியோவை அவர் பதிவிட்டு இருந்தார்.
இதேபோல் அவர் வெளியிட்டு இருந்த மற்றொரு வீடியோவில், 'இந்த பொல்லாத உலகத்திலே, ஏன் என்னை படைத்தாய் இறைவா, வலி தாங்காமல் கதறும் கதறல், உனக்கே கேட்கவில்லையா, எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ, எங்கு போய் தொலைந்தாய் இறைவா, கரும் கல்லான உன்னை நான், பொழுதும் தொழுதேன் போதவில்லையா, வாடி வதங்கும் ஏழையை நீயும் வதைத்தால் ஆகுமா, கோடி விளக்கை ஏற்றி நீ ஊதியணைத்தால் நியாயமா' என்று ஜெய்பீம் திரைப்பட பாடலை ஓடவிட்டுள்ளார். பின்னர் குளிர்பான பாட்டிலை திறந்து மருந்தை கலந்து குடிக்கிறார். இதை பார்த்த அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவருடைய வீட்டுக்கு நண்பர்கள் விரைந்து சென்றனர். அங்கு அந்த வாலிபர் மயங்கி கிடந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைத்தொடர்ந்து கார்த்திக்கை மீட்டனர். பின்பு அவர் சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு தலை காதலால் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications