பட்டையக் கிளப்புது தமிழக அரசு..இலவச பட்டா + வீடு + மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்
திண்டுக்கல்: தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், 45 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என திமுக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பித்தளைப்பட்டி ஊராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஐ பெரியசாமி
அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதலமைச்சர் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இன்றைய தினம் புதுச்சத்திரம், பித்தளப்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
முதியோர் உதவித்தொகை
60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக உள்ளார். வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்களுடன் ஸ்டாலின்
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் முதலமைச்சருக்கு பதிலாக சார்பில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று அரசுக்கு அனுப்பி வைத்து உடனடியாக தீர்வு காணும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டதாகத்தான் அதற்கு அர்த்தம். அந்த அளவிற்கு இம்முகாமிற்கு முக்கியத்துவம் உள்ளது. இங்கு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரடிப் பார்வைக்கு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முக ஸ்டாலின்
எனவே, எல்லாருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்" என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications