வேடசந்தூர் திமுகவில் உட்கட்சி பூசல் உச்சம்... வெல்லும் வாய்ப்புகளை கொல்லும் தலைகள்- ஷாக் உ.பி.க்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் தொகுதி திமுகவில் அடேங்கப்பா! இப்படியெல்லாமா உட்கட்சி பூசல்கள் வெடிக்கும்.. இதே நிலைமை தொடர்ந்தால் கிடைக்கக் கூடிய வெற்றி வாய்ப்பை இப்பவே குழிதோண்டி புதைத்ததாகிவிடும் என ஆதங்கப்படுகின்றனர் வேடசந்தூர் தொகுதி திமுகவினர்.
திமுகவின் நிர்வாகிகளுடன் அண்மையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீரா சாமிநாதன், கூட்டணி கட்சிக்கு தொகுதியை தந்துவிடாமல் திமுகவுக்கே தர வேண்டும் என ஸ்டாலினிடம் நேரடியாகவே கேட்டார்.
இந்த கோரிக்கை வேடசந்தூர் தொகுதி திமுகவின் நீண்டகால விருப்பமும் கூட. கடந்த சட்டசபை தேர்தலில் கூட வேடசந்தூர் தொகுதியில் திமுக போட்டியிட்டிருந்தால் நிலைமை அதிமுகவுக்கு எளிதில் சாத்தியமாகி இருக்காது என்பதுதான் பொதுவாக அனைவரது கருத்து. இதை அதிமுகவினரும் கூட ஆமோதிக்கத்தான் செய்கின்றனர்.
வேடசந்தூர் தொகுதியை திமுகவுக்கு வாங்கித் தாங்க.. ஸ்டாலினிடம் வீடியோ காலில் துண்டுபோட்ட நிர்வாகிகள்
சட்டசபை தேர்தல்
இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியை எப்படியும் திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்பதை அனைத்து நிலைகளிலும் அக்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தொடங்கி ஸ்டாலின் வரை இந்த கோரிக்கை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் தொகுதியில் திமுகவுக்குள் இருக்கும் உட்கட்சி பூசல் அடேங்கப்பா என மிரள வைக்கிறது.
வேடசந்தூர் கள நிலவரம்
அதிமுகவின் அசைக்க முடியாத வெற்றி தொகுதிகளில் ஒன்று வேடசந்தூர் என்பதாக இருந்தது களநிலவரம். கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவின் தொகுதி என்கிற இந்த முகம் மாற்றப்பட்டு பட்டி தொட்டி எங்கும் கிளைகளை உருவாக்கி அதிமுகவின் வாக்கு வங்கியை பிரித்து திமுகவுக்கும் கணிசமான அளவு கிராமங்களில் ஆதரவு இருக்கிறது என்கிற நிலைமையை உருவாக்கி வைத்திருந்தனர் சில சீனியர் நிர்வாகிகள்.
திமுகவில் பிளவு
ஒழுங்காக போய்க்கொண்டிருந்த நிலைமையில் கட்சி தலைமை மேற்கொண்ட சில நடவடிக்கைகள் அப்படியே இந்த பணிகளை முடக்கி வைத்தது. இதனால் திமுகவின் ஒன்றிய அமைப்புகளில் வெளியே தெரியாதவகையில் ஆனால் ஆழமான பிளவு உருவானது. கொரோனா காலத்தில் நிவாரணப் பணிகள் வழங்குவதில் இந்த பிளவு பகிரங்கமாக வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டது. இது திமுக மேலிடம் வரைக்கும் கொண்டும் செல்லப்பட்டது.
யார் வேட்பாளர்?
இந்த பின்னணியில் இப்போது வேடசந்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் இவர்தான் என ஒரு க்ரூப் பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கிறது. இன்னொருதரப்போ இல்லை இல்லை அவர்தான் வேட்பாளர் என இப்போதே பகிரங்கமான உட்கட்சி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதுமே பணம் கொடுத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என்பது பொதுவான வாக்காளர் மனோநிலையாக இருக்கிறது. இதனை வைத்து ஒரு க்ரூப் அடுத்த எம்.எல்.ஏ. நாங்களே என்கிற கோதாவில் இருக்கிறது.
திமுகவில் ஜாதியா? பணமா?
இதனால் சக கட்சிக்காரர்களை கூட பொது இடங்களில் வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரியும்படி ஓரம்கட்டிப் போய்விடுகிறது இந்த க்ரூப். என்னதான் பணம் கொடுத்தாலும், இங்கே இருக்கிற அடிப்படை வாக்கு கட்டமைப்பை அதாவது ஜாதிய வாக்கு வங்கியை மீறி எதுவும் செய்ய முடியாது; இந்த யதார்த்தத்தை உடைக்கவே முடியாது. ஆகையால் எங்களுக்குத்தான் எம்.எல்.ஏ.சீட் என்கிறது இன்னொரு க்ரூப். இப்படி ஆளுக்கொரு திசையில் கட்சி நிர்வாகிகள் பிரிந்து கிடப்பதை விரைவாக கட்சி மேலிடம் முடிவுக்கு கொண்டுவந்தால்தான் வேடசந்தூரில் திமுக கட்சியே தலை எடுக்க முடியும் என ஆதங்கப்படுகின்றனர் அக்கட்சி உடன்பிறப்புகள்.