வேடசந்தூரில் மீண்டும் காங்.? தினேஷ் குண்டுராவுடன் சமூக ஆர்வலர் சந்திப்பு- திமுக நிர்வாகிகள் 'ஷாக்'

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வேடசந்தூர் சட்டசபை தொகுதியை குறி வைத்து சமூக ஆர்வலர் நம்பி என்பவர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை சந்தித்ததாக வலம் வரும் செய்திகளால் உள்ளூர் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

வேடசந்தூரைப் பொறுத்தவரை அதிமுகவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய தொகுதிகளில் ஒன்று. அதனால்தான் பெரும்பாலான தேர்தல்களில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு இந்த தொகுதியை ஒதுக்கி விடுவது வழக்கம்.

மாநிலம் முழுவதும் அதிமுகவுக்கு எதிரான ஒரு அலை வீசினால் அதன் பயனாகவே வேடசந்தூரில் திமுக வென்றிருக்கிறது என்பதும் தேர்தல் வரலாறு. வேடசந்தூரில் வெல்லும் கட்சிதான் இதுவரை கோட்டையை கைப்பற்றியிருக்கிறது என்பதும் சுவாரசியமான வரலாறு.

திமுக போட்டியில்லை

திமுக போட்டியில்லை

வேடசந்தூரில் 2001 சட்டசபை தேர்தலில்தான் கடைசியாக திமுக போட்டியிட்டது. 2006, 2011, 2016 தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கே இந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. 2006-ல் காங்கிரஸும் 2011, 2016 தேர்தல்களில் அதிமுகவும் வென்றது. கடந்த 3 சட்டசபை தேர்தல்களில் திமுக இந்த தொகுதியில் போட்டியிடவில்லை.

தலைமையிடம் மன்றாடும் திமுக

தலைமையிடம் மன்றாடும் திமுக

இந்த தலைமுறை திமுக இளைஞர்களைப் பொறுத்தவரை தொகுதி சுவர்களில் உங்கள் ஓட்டு உதயசூரியனுக்கு என எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். அதனால்தான் கொரோனா கால கூட்டங்களிலும் கூட, தலைவரே! இந்த முறையாவது திமுகவுக்கே வேடசந்தூரை கொடுங்க.. ஜெயிக்க வைக்கிறோம்' என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மன்றாடிக் கேட்டனர் உள்ளூர் நிர்வாகிகள். இதனால் எப்படியும் வேடசந்தூர் தொகுதியில் திமுக போட்டியிடும்... முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன் உள்ளிட்ட சிலரது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இருப்பதாகவும் கூட அடிபட்டது. திமுகவினரும் உற்சாகமாக தேர்தல் வேலைகளில் இறங்கி இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது அந்த செய்தி.

உலை வைத்த நம்பி

உலை வைத்த நம்பி

வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சியும் சேராதவர் சமூக ஆர்வலர் நம்பி. ஆனால் நலத்திட்ட உதவிகள் வழங்கியே தொகுதியில் தன்னை பிரபலாமாக்கிக் கொண்டவர். இந்த நம்பிதான் உள்ளூர் திமுகவினரின் ஒட்டுமொத்த உற்சாகத்துக்கும் அணுகுண்டு வேட்டு வைத்திருக்கிறார். அண்மையில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ் குண்டுராவை மரியாதை நிமித்தமாக நம்பி சந்தித்தார் என்ற படம் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சமூக ஆர்வலர் நம்பி முயற்சித்து கொண்டிருக்கிறார்; இந்த முயற்சியின் ஒரு அங்கம்தான் தினேஷ் குண்டுராவுடனான சந்திப்பு என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

தொகுதியில் வேலை செய்யமாட்டோம்

தொகுதியில் வேலை செய்யமாட்டோம்

இது தொடர்பாக திமுக உள்ளூர் நிர்வாகிகளிடம் நாம் பேசியபோது, இரண்டு மூன்று நாட்களாக நம்பியை வைத்து தொகுதியில் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை உதயசூரியன் சின்னம்தான் இங்கே போட்டியிட வேண்டும்.உதயசூரியனில் யார் நின்றாலும் உயிரை கொடுத்து வேலை செய்வோம். மறுபடியும் காங்கிரஸுக்கு கொடுத்தால் எழுதி வைச்சுக்குங்க.. இங்க அதிமுக போட்டியிட்டால் அந்த கட்சிதான் ஜெயிக்கும்.. தேர்தலின் போது நாங்க அத்தனை நிர்வாகிகளும் அப்படியே கூண்டோடு தொகுதியை விட்டு வெளியேறி பக்கத்து தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி அண்ணனுக்கு ஓட்டுக் கேட்க போயிடுவோம்.. தேர்தல் முடிந்துதான் திரும்பி வருவோம் என பொங்கி வெடிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+