"பாஜகவை அழிக்கும் வரை ஓய மாட்டோம்.." விளாசி தள்ளிய திண்டுக்கல் சீனிவாசன். அடுத்து என்ன சொன்னார்
திண்டுக்கல்: திமுகவைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனது உரையில் திமுக மட்டுமின்றி பாஜகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக அரசைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், தனது பேச்சில் திமுகவைக் கடுமையாகச் சாடினார். அதேபோல பாஜகவையும் விமர்சித்த அவர், பாஜகவைத் தமிழகத்தில் அழிக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் பேசியுள்ளார்.
திண்டுக்கல் சீனிவாசன்: அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசனிடம் ஓபிஎஸ் மற்றும் பாஜகவின் ஆதரவால்தான் எடப்பாடி பழனிசாமியால் ஆட்சி செய்ய முடிந்ததாக ஓபிஎஸ் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த திண்டுக்கல் சீனிவாசன், "எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால் மட்டுமே ஓ பன்னீர்செல்வம் வேட்டிக் கட்டி வெளிவர முடிந்தது.
ஆனால், இப்போது தெய்வம் தந்த தண்டனையால் அவரால் அதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தான் தெய்வம் தந்த தீர்ப்பு. ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
எடப்பாடி பழனிசாமி: அந்த நான்கரை ஆண்டுகள் தமிழ்நாட்டில் நாங்கள் எப்படி ஆட்சி செய்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களுக்குத் தேவையான மெஜாரிட்டி இருந்ததால் மட்டுமே நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிந்தது. ஓபிஎஸ் உட்பட யாருடைய ஆதரவிலும் நாங்கள் இல்லை. எங்கள் சொந்த கட்சியில் நாங்கள் நின்றோம். பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் அப்போது எடப்பாடி பக்கம் இருந்தனர். இப்போதும் அனைத்து எம்எல்ஏக்களும் எடப்பாடி பக்கமே உள்ளனர்.
கடந்த முறை நடந்த தேர்தலில் கூட நாங்கள் சொற்ப வாக்குகள் வித்தியத்திலேயே தோல்வி அடைந்தோம். எல்லாம் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தான்.. ஆனால், அடுத்த முறை அரசு, அதிகாரிகள் சிறுபான்மையினர் எங்களுக்கு ஆதரவாக வருவார்கள். அப்போது 45% வாக்குகளைப் பெற்று 200 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.
பாஜகவை அழிப்போம்: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கூட அதிமுகவுக்குச் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்று பாஜக ராம சீனிவாசன் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "அது அவர்கள் கருத்து. இதற்கு நாங்கள் பதில் சொல்லிவிட்டோம்.. நாங்கள் இவர்களை அழிக்கும் வரை ஓயமாட்டோம்" என்றும் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல்: தொடர்ந்து லோக்சபா தேர்தல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மோடியா லேடியா என்று பிரசாரம் செய்து தேர்தலைச் சந்தித்தார். அப்போது 37 எம்பிக்களை தமிழ்நாடு மக்கள் அதிமுகவுக்குக் கொடுத்தனர். இந்த முறை பாருங்கள் எடப்பாடி தலைமைக்கு 39 எம்பிக்கள் கிடைக்கும். தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு நல்லது செய்பவர்களுக்குத்தான் ஆதரவு கொடுப்போம். கெடுதல் செய்வோரை எதிர்ப்போம்.
காவிரி பிரச்சினை சமயத்தில் சுமார் 27 நாட்கள் நாடாளுமன்றத்தையே நடக்க விடாமல் முடக்கிய கட்சி தான் அதிமுக. இப்போது 38 எம்பிக்களை கொண்ட திமுகவினர் விரலைக் கூட அசைக்கவில்லை.
கூட்டணி: லேக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து ஆலோசித்து வருகிறோம். சரியான நேரத்தில் கூட்டணி குறித்த முடிவைத் தலைமை எடுக்கும். யாருடைய கூட்டணி இல்லாமலும் 37 இடங்களை வென்று காட்டியவர் ஜெயலலிதா. அதே சக்தி இன்றும் எங்களுக்கும் இருக்கிறது. கூட்டணிக்குள் மற்ற கட்சிகள் வந்தால் வரட்டும். நாங்கள் மக்களிடம் நேரடியாகச் சென்று வாக்கு கேட்போம்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications