திண்டுக்கல் பிரியா.. மறுவீட்டுக்கு வந்த இடத்தில் மரணம்.. தாலியின் ஈரம் காயும் முன்பே விபரீதம்
திண்டுக்கல்: திருமணமான 4 நாளில் மறுவீட்டுக்கு வந்த இடத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பு மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா, திருமணம் இப்போது பண்ணலாமா என்பதை ஒருமுறைக்கு இருமுறை கேட்டுக்கொள்ளுங்கள். பெற்றோரின் கட்டாயத்தின் பெயரில் திருமணம் நடந்தால் அது பின்னாளில் சிக்கலாகிவிடுகிறது.

பிடிக்காதவருடன் திருமணம் நடப்பதால் காலம் எல்லாம் அந்த பெண்கள் கஷ்டப்படுவது தொடர்கிறது. மறுபக்கம் பிடிக்காத திருமணத்தை நடத்த முயன்றால் வீட்டை விட்டு ஓடிப்போகும் சம்பவங்களும் நடக்கிறது. அதே நேரம் பிடிக்காத திருமணம் காரணமாக திருமணம் ஆன சில நாளிலேயே உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். அவருடைய மகள் பிரியா (வயது 20). இவர், திண்டுக்கல் எம்.வி.எம். அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பிரியாவிற்கும், தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த இருசக்கர மெக்கானிக் கமலக்கண்ணன் (27) என்பவருக்கும் கடந்த 11-ந்தேதி திருமணம் நடந்தது. பின்னர் தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் அஞ்சுகுளிப்பட்டிக்கு மறுவீடு விருந்துக்கு புது மணதம்பதியினர் கடந்த செவ்வாய்கிழமை வந்திருந்தனர்.
இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை பிரியா, வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது அருகே படுத்திருந்த மனைவியை காணாமல் தேடிய கமலக்கண்ணன், அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தார். உடனே ஓடிவந்து பெற்றோர் பார்த்தனர். மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அவர்களும் கதறி அழுதனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், திருமணம் பிடிக்காததால் பிரியா தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட பிரியாவுக்கு திருமணமாகி 4 நாட்களே ஆவதால், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. கமலக்கண்ணன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திண்டுக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications