உளவியல் சிக்கலை உருவாக்கும் ஜீரோ கவுன்சிலிங் முறையை கைவிட வலியுறுத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல்
திண்டுக்கல்: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் சிக்கலை உருவாக்கக் கூடிய ஜீரோ கவுன்சிலிங் முறையை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கான உரிய சலுகைகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எப்போதும் உண்டு. தற்போதைய திமுக ஆட்சி அமைந்த போதும் அத்தகைய எதிர்பார்ப்புதான் இருந்தது.
ஆனால் அண்மைக் காலமாக பேசுபொருளாகி இருக்கும் ஜீரோ கவுன்சிலிங் என்பது ஆசிரியர்களிடையே மிகக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஜீரோ கவுன்சிலிங் முறையால் தங்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தை தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள். ஏற்கனவே ஜீரோ கவுன்சிலிங் அமல்படுத்தமாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் ஆசிரியர்களிடம் இந்த அச்சம் ஆழமாக பதிந்துள்ளது.

ஜீரோ கவுன்சிலிங் எதிர்ப்பு ஏன்?
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் கூறுகையில், தற்போது பூஜ்யக் கலந்தாய்வு, ஆசிரியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. ஆசிரியர் பணி என்பது நிர்வாகப் பணி அல்ல. ஆசிரியர் பணி என்பது கற்பித்தல் சார்ந்த பணி. ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றும்போதுதான் பள்ளிச் சூழல், பள்ளியின் அமைவிடச் சூழல், பள்ளியில் பயிலும் மாணவர்களின் சமூகச் சூழல், பெற்றோர்களின் சூழல், மக்கள் தொடர்பு போன்ற பல கூறுகளையும் அறிந்து ஆழ்ந்த, தேர்ந்த அனுபவத்துடன் அப்பகுதி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கும் அப்பள்ளியின் வளர்ச்சிக்கும் பணியாற்றும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு ஏற்படும்.அதுமட்டுமல்ல 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பெரும்பாலும் வயதில் மூத்த பணி ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள். அவர்களைப் பணியிடமாறுதல் செய்வது என்பது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயலாக அமைந்துவிடும் என்கிறார்.

திடீர் பாதிப்பு
இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழிடம் பேசிய ஆசிரியர்கள், 20 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் வீடுகளில் இருந்து தொலைதூரத்தில் பணி கிடைத்த பள்ளிக்குதான் இப்போதும் சென்று வருகிறோம். நாங்கள் நாள்தோறும் 30,35 கி.மீ. தொலைவு சென்று பணிபுரிந்தாலும் இதுதான் என் பள்ளி, என் மாணவர்கள் என்கிற எண்ணத்துடன் இந்த 20 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். பள்ளியின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு கூட சொந்த பணத்தில் செலவும் செய்திருக்கிறோம். இப்போது திடீரென உங்களை வேறு ஒரு பள்ளிக்கு மாற்றுகிறோம் என அறிவித்தால் இதை எப்படி எங்களால் எதிர்கொள்ள முடியும்? ஜீரோ கவுன்சிலிங் முறையில் என் வீட்டுக்கு அருகே உள்ள பள்ளியில் கூட இடம் கிடைக்கலாம். ஆனால் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருக்கும் எங்களால் அதனை சுலபமாக ஏற்க முடியாது. என்னதான் எங்கள் வீட்டுக்கு பக்கத்து பள்ளியாக இருந்தாலும் அந்த பள்ளிக்கு புதியதாக பணிக்கு சேர்ந்து மாணவர்களுடன் அறிமுகமாகி அவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் கல்வி கற்பது என்பது உடனடி சாத்தியமானது அல்ல. சில ஆண்டுகளாகிவிடும். அதற்குள் ஓய்வு பெறும் வயதையும் எட்டிவிடுவோம் என்கின்றனர்.

ஜீரோ கவுன்சிலிங் - யாருக்கு பயன்?
மேலும் ஜீரோ கவுன்சிலிங் முறையில் பலருக்கு பயன் கிடைக்கலாம் என்கிற வாதம் இருக்கிறது. அதேநேரத்தில் ஜூனியர் ஆசிரியர்களுக்குதான் இந்த பயன். எங்களைப் போல 15 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்துவிட்டவர்களுக்கு எந்த பயனும் இல்லை என்கின்றனர். அத்துடன் மேலும் ஒரு விஷயத்தையும் நம்மிடம் பேசிய ஆசிரியர்கள் சுட்டிக் காட்டவும் செய்கின்றனர்.

மாணவர்களின் டிராப் அவுட் விவகாரம்
அதாவது கொரோனா லாக்டவுன் காலத்தில் பள்ளிகள் திறக்காமல் இருந்ததால் கிராமப்புற மாணவர்கள் சர்வ சாதாரணமாக கூலி வேலைக்கு சென்று பழகிவிட்டனர். அவர்களும் நாள் கூலி, வாரக் கூலி என வாங்கி பழகத் தொடங்கிவிட்டனர். இப்போது பள்ளிகளை திறக்கும் போது அவர்கள் பள்ளிக்கு வரவும் மறுக்கின்றனர். இதனால் மாணவர்கள் டிராப் அவுட்- அதாவது படிப்பை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த மாணவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி பெற்றோர், ஊர் மக்களிடம் கலந்து பேச அவர்களுடன் இரண்டற கலந்து இருக்கும் எங்களைப் போன்ற ஒரே ஊரில் பல்லாண்டு காலம் பணிபுரிந்த ஆசிரியர்களால் மட்டும்தான் சாத்தியம். ஆகையால் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் தரக் கூடிய ஜீரோ கவுன்சிலிங் முறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரந்தரமாக கைவிடும் அறிவிப்பை வெளியிட்டாலே எங்களுக்கு போதும்.. அதைத்தான் முதல்வரிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications