வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில்
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை மேல்முறையீட்டு வழக்கில் , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமே உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
சிவில் பணிக்காக பயிற்சி-சக பெண் பயிற்சி மாணவி பழக்கம்
தற்போது ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்வானார். இதற்காக 2010 ஆம் ஆண்டு சென்னையில் தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் போது பிரியதர்ஷினி என்ற சக பயிற்சி பெண் பழக்கமாக அவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் காதலை இருவர் வீட்டிலும் அங்கிகரித்துள்ளனர்.
ஐபிஎஸ் பணியில் தேர்வான வருண்குமார்
இருவருமே சிவில் தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தனர், இந்நிலையில் இருவர் குடும்பத்தாருடன் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் இருவரும் பயிற்சி எடுத்த நிலையில் பிரியதர்ஷினி தேர்வில் தயாராகாத நிலையில் வருண்குமார் தேர்வானார். பின்னர் அனைத்து தேர்வுகளையும் முடித்து ஐபிஎஸ் பணியில் தேர்ச்சிப்பெற்றார்.
ஐபிஎஸ் தேர்வுக்குப்பின் மாறியது நெஞ்சம், வரதட்சணை கேட்டதாக புகார்
இதன் பின்னர் ஐபிஎஸ் தேர்வு பெற்றதை காரணம் காட்டி ரொக்கம் மற்றும் சொகுசு கார் வரதட்சணையாக வழங்க வேண்டும் என வருண்குமாரின் பெற்றோர் கேட்டதாக பிரிதர்ஷினி குற்றம் சாட்டியிருந்தார். இந்த வரதட்சணையை தராத பட்சத்தில் திருமணம் நடக்காது என கூறியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மின்னஞ்சல்கள் ஆதாரம் அழிப்பு
இதற்கிடையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட இருவருக்கும் இடையே மின்னஞ்சல் மூலம் விவாதம் நடந்துள்ளது. தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்க உள்ளதாக பிரியதர்ஷினி தெரிவிக்க பிரியதர்ஷினியின் மின்னஞ்சலை சட்டவிரோதமாக ஹேக் செய்து இருவருக்குமிடையிலான உரையாடல்கள், ஆதாரங்களை வருண்குமார் அழித்ததாக பிரியதர்ஷினி குற்றம் சாட்டியிருந்தார்.
நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிரியதர்ஷினி
இந்த நிலையில் வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பிரியதர்ஷினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வரதட்சணை கேட்டது, பின்னர் மிரட்டல் விடுத்தது என்று வருண்குமார் மீது புகார் அளித்தார். புகார் எடுக்கப்படாத நிலையில் புகார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
உயர் நீதிமன்ற மறுப்பு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடும்
இதை எதிர்த்து பிரியதர்ஷினி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் காவல் அதிகாரி வருண்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது.
வழக்கை எடுத்த உச்ச நீதிமன்றம்- தமிழக அரசு பதில் மனு
இந்த மனுவுக்கு தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், "இந்த விவகாரத்தில் புகார் அளித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் இருவருக்கும் பொதுவான நண்பர்கள் உள்ளிட்ட 23 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளது.
ஆதாரங்களை அழித்தது உண்மைதான் - தமிழக அரசு பதில்
அதே நேரத்தில் வருண்குமாருக்கு எதிராக தமிழக காவல் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கணிணியில் இருந்த ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்ததை சுட்டிக்காட்டி இருந்தோம், குறிப்பாக அவர் பயன்படுத்திய செல்போன்களை ஆய்வுக்கு உட்படுத்த சமர்பிக்க கூறியபோது, அது அவருக்கு எதிராக ஆதாரமாகிவிடும் என்பதால் அதனை வேண்டுமென்றே மாற்றியுள்ளார்.
எனவே அது ஐ.டி. சட்டம் 66-ன் படியும், ஐ.பி.சி 204-ன் கீழும் குற்றம் என ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்டது. அதை தற்போதும் உறுதிப்படுத்துகிறோம்" என தமிழக அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.
திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன?
உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம்- அரசு பதில்
மேலும், குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்த விவரங்களை தாண்டி புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் குறிப்பிடுவதற்கில்லை எனவே இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்கும் எனத் தெரிகிறது.