முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறினோம்.. குவைத் தீ விபத்தில் தப்பிய கேரளா தொழிலாளி பரபர தகவல்!
துபாய்: குவைத் தீ விபத்தில் உயிர் தப்பிய கேரளாவை சேர்ந்த தொழிலாளர், தீ விபத்தில் இருந்து தாங்கள் உயிர் தப்பியது பற்றி பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார்.
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சுத்திணறியும் 53 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழந்தவர்களில் பலர் இந்தியர்கள் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 43 பேர் காயமடைந்துள்ள நிலையில், இவர்களில் 30 பேர் இந்தியர்கள் என தகவல் கிடைத்துள்ளது.

தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்ததை குவைத் அரசு உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்து வருவதாகவும் குவைத் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் தீ விபத்து ஏற்பட்ட இந்த கட்டிடம் மலையாள தொழிலதிபர் கேஜி ஆபிரகாமுக்கு சொந்தமான NBTC குழுமத்திற்கு சொந்தமானது. இன்று அதிகாலை, கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள சமையலறையில் ஏற்பட்ட தீ, மற்ற தளங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது.
இந்தக் கட்டிடத்தில் கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட சுமார் 195 தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்படி உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் தொழிலாளர்கள் குறித்த உதவி எண்ணாக +965 65505246 தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவைத் தீ விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "குவைத் தீ விபத்து குறித்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன். 40 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். அடுத்தகட்ட தகவலுக்காக காத்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் 2 தமிழர்கள் உள்ளிட்ட 40 இந்தியர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் இது தொடர்பான விபரங்களை தருமாறு இந்திய தூதரகத்தை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்களையும் காயம் அடைந்தவர்களின் விவரங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் உயிர் தப்பிய தொழிலாளர் பரபரப்பு தகவலைத் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தீ விபத்தில் தப்பியது குறித்து செய்தி நிறுவனத்திற்கு தனது அதிர்ச்சி அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் திடீரென புகை வந்தது. புகை மூட்டம் வந்ததும் விழித்துப் பார்த்தபோது அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. புகை சூழ்ந்திருந்ததை கண்டதும் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினோம் என அந்த தொழிலாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications