குவைத் தீ விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் பலி- யார் யார்? அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: குவைத் தீ விபத்தில் மொத்தம் 45 இந்தியர்கள் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்களின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
குவைத் நாட்டின் மன்கஃப் பகுதியில் 6 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது தீ. இந்த விபத்து நடந்த போது மொத்தம் 150-க்கும் அதிகமானோர் அக்கட்டிடத்தில் உறங்கிக் கொண்டிருந்தனர். இதில் மொத்தம் 45 இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேரும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
குவைத் தீ விபத்தில் பலியான 7 தமிழர்கள் விவரம்:
வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி)
சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்)
சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்)
முகமது ஷெரீப் (திண்டிவனம்)
கருப்பணன் ராமு (ராமநாதபுரம்)
ராஜூ எபநேசன் (திருச்சி)
ரிச்சர்ட் ராய் (பேராவூரணி)


குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குவைத்துக்கு மத்திய இணை அமைச்சர் கேவி சிங், கேரளா அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
குவைத்தில் பலியான அனைத்து இந்தியர்களின் உடல்களும் நாளை கொண்டுவரப்படுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்களும் நாளை கொண்டுவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை இதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும் குவைத் தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குமான உதவிகளையும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செய்து வருகிறது.











Click it and Unblock the Notifications