துபாயில் மோசமான நிலைமை.. இந்தியர்களே கவனமாக இருங்க.. ஈரானால் செல்போன்களுக்கு போன மெசேஜ்
துபாய்: அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலால் நிலைக்குலைந்து போன ஈரான் விடாமல் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அரசு சார்பில் துபாய் மக்களின் செல்போன்களுக்கு அலர்ட் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் துபாயில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருப்பது அவசியமாகும்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது ஈரான்.

அதன்படி ஈரான் தொடர்ந்து சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை தாக்கி வருகின்றன. இந்த நாடுகளில் அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் இருக்கிறது. மேலும் இந்த நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகின்றன. இதனால் தான் ஈரான் இந்த அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது.
துபாய் மீது தாக்குதல்
கடந்த மாதம் 28 ம் தேதி போர் தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்த நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. குறிப்பாக துபாயை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது. துபாய் விமான நிலையம், புர்ஜ் அல் அரப் கட்டடம், ஜிபல் அலி துறைமுகம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அந்த கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
செல்போன்களுக்கு அலர்ட் மெசேஜ்
இந்நிலையில் தான் இன்று திடீரென்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மக்களுக்கு அந்த நாட்டு அரசு செல்போனில் அலர்ட் மெசேஜ் அனுப்பி உள்ளது. அந்த மெசேஜில், ''தற்போது நிலவும் நிலைமையின்படி ஏவுகணை தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளது.
இதனால் உடனடியாக அருகே உள்ள பாதுகாப்பான கட்டங்களுக்கு செல்ல வேண்டும். ஜன்னல்கள், கதவுகள் மற்றும் திறந்தவெளி பகுதிகளில் இருந்து தூரமாக இருக்க வேண்டும். மேற்கொண்டு பிற அறிவுரைகள் வழங்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
துபாய்காரர் சொல்வது என்ன?
அதாவது துபாய் மீது இன்றும் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அலர்ட் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி துபாயில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், ''எனது செல்போனுக்கு அடுத்தடுத்து நான்கு எச்சரிக்கை மெசேஜ்கள் வந்தன. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துள்ளேன். அதுமட்டுமின்றி அவசரகால சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாஸ்போர்ட் உள்பட முக்கிய ஆவணங்களை தனியாக எடுத்து வைத்துள்ளேன்'' என்றார்.
இந்தியர்கள் கவனம்
துபாயை எடுத்து கொண்டால் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இதனால் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது ஈரான் தாக்குதலால் உலகிலேயே பரபரப்பாக இயங்கி வரும் துபாய் விமான நிலையத்தில் விமான சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துபாய் மட்டுமின்றி சவுதி அரேபியா, கத்தார் உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications