பக்ரீத் பண்டிகை.. துபாயில் என்ன மாதிரி ஏற்பாடுகள் நடக்கிறது தெரியுமா?
துபாய்: உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை ஜூன் 16 - ஜூன் 17 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமிய பெருமக்கள் தயாராகி வருகிறார்கள். பக்ரீத் பண்டிகையை ஒட்டி துபாயில் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை கொடுக்க தயாராகி வருகிறது ஐக்கிய அரபு அமீரகம்.. இது பற்றி பார்ப்போம்.
இஸ்லாத்தில் உள்ள 5 கடமைகளை முஸ்லிம்கள் செய்ய வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. முதலாவது கலிமா எனப்படுகிறது. அதாவது அல்லாஹ்வை ஒரே இறைவனாகவும், முஹம்மது நபியை அவனது தூதராகவும் ஏற்றுக்கொள்வது.

2 வது 5 வேளை தொழுகையை நிறைவேற்றுவது. 3 வது ஜகாத் எனப்படும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வருமானத்தில் ஒரு பகுதியை தானம் செய்வது. 4 வது ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்பது. 5 வது ஆயுளுக்கு ஒரு முறையாவது அரபு மாதமான துல் ஹஜ்ஜில் பொருளாதாரமும், உடல் நலனும் இருப்பவர்கள் மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்வதாகும்.
இதில் 2 கடமைகளை மையப்படுத்தி இஸ்லாத்தில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று முடித்தவுடன் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இப்பண்டிகை, ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்துவிட்டு ஷவ்வால் மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஏழைகளுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை முஸ்லிம்கள் வழங்குவது வழக்கம்.
2வது பண்டிகை என்பது இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ்ஜை மையப்படுத்தி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் துல் ஹஜ் மாதம் பிறை 10 ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள்.
உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை ஜூன் 16 ஜூன் 17 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதிலும், இஸ்லாமிய நாடுகளில் ஒரு படி மேலே சென்று இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அரபு நாடுகளில் கோலாகலமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயிலும் பக்ரீத் பண்டிகையை ஒட்டி பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பொது இடங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மல்டி லெவல் பார்க்கிங்க் முனையங்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தாது.
சனிக்கிழமை ஜூன் 15 முதல் ஜூன் 18 ஆம் தேதி வரை பக்ரீத் பண்டிகை விடுமுறை விடப்பப்பட்டுள்ளது. இந்த 4 நாட்களுக்கும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று துபாய் சாலை போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் தற்போது அமலில் உள்ள கட்டணம் வசூலிக்கப்படும்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் பக்ரீத் பண்டிகை விடுமுறை நாட்களில் துபாய் மெட்ரோ மற்றும் துபாய் டிராம் சேவை இயங்க்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டிராம் சேவையும் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், அதன்பிறகு திங்கள் முதல் சனிக்கிழமை வரை (ஜூன் 17 - 21) காலை 6 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும் இயங்க்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications