ஆர்சிபி தோற்றதால் சிஎஸ்கே டீமுக்கு அடித்த லக்.. குவாலிபையர் 1-ல் டெல்லியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதல்
துபாய்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்றைய லீக் போட்டியில், ஹைதராபாத் அணியிடம் தோற்றதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிருஷ்டம் அடித்துள்ளது.
அவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் இருக்கு.. என்ற பிரபல சினிமா டயலாக் போல ஆர்சிபி தோற்றதும், சிஎஸ்கேவிற்கு மகிழ்ச்சி செய்தியாக மாறிவிட்டது.
ஆம்.. ஒருவேளை ஆர்சிபி ஜெயித்திருந்தால், சிஎஸ்கே இன்று பஞ்சாப் அணியுடனான போட்டியில் வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் மோத வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

ரன் ரேட் எப்படி இருக்க வேண்டும்
ஒருவேளை இன்று பிற்பகல் துவங்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோற்றால் கூட குவாலிபையர் 1 ரவுண்டுக்குதான் சிஎஸ்கே போகுமே தவிர, குவாலிபையர் 2 ரவுண்ட் போக தேவையில்லை. ஒருவேளை சிஎஸ்கே இன்றைய போட்டியில் 110 ரன்களுக்கும் மேலான வித்தியாசத்தில் தோற்றால்தான் குவாலிபையர் 2 போக வேண்டிய நிலை ஏற்படும். அதுவும் கூட ஆர்சிபி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லியுடன் வெற்றி பெற வேண்டும். இந்த இரு கண்டிஷன்களும் ஒரே மாதிரி நடப்பது மிகவும் அபூர்வம். எனவே ஏறத்தாழ சிஎஸ்கே குவாலிபையர் 1ல் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லியோடு மோதுவது உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம்.

ஆர்சிபிக்கு பின்னடைவு
சிஎஸ்கே அணிக்கு 18 பாயிண்ட்டுகள் உள்ளன, ஆர்சிபி, டெல்லியை வென்றால்தான் 18 பாயிண்ட் பெற முடியும். அப்போது ரன் ரேட் கணக்கில் எடுக்கப்படும். ரன் ரேட்டில் சிஎஸ்கே ஆர்சிபிஐ விட உயரத்தில் உள்ளது. எனவே ஆர்சிபிதான் குவாலிபையர் 2 ரவுண்ட் செல்ல வேண்டிய அணியாக இருக்கும்.
Recommended Video

சென்னை-டெல்லி மோதல்
புள்ளி பட்டியலில் முதல் மற்றும் 2வது இடத்தில் உள்ள அணிகளான, டெல்லி மற்றும் சென்னை அணிகள் வரும், ஞாயிற்றுக்கிழமை மோதும். அதில் வெற்றி பெறும் அணி நேராக பைனலுக்குள் செல்லும். தோற்கும் அணி, எலிமினேட்டர் ரவுண்டுக்கு செல்ல வேண்டியிருக்கும். அங்கு, குவாலிபையர் 2ல் வெற்றி பெற்ற அணியோடு மோத வாய்ப்பளிக்கப்படும்.

மும்பை, கொல்கத்தா
ஆர்சிபி அணி குவாலிபையர் 2க்கு போகப்போகிறது. அந்த அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அது மும்பை இந்தியன்சாக இருக்கலாம், கொல்கத்தாவாக இருக்கலாம், அடுத்தடுத்த போட்டிகளின் வெற்றி தோல்விகள் அதை தீர்மானிக்கும்.

என்ன வித்தியாசம்
குவாலிபையர் 1ல் சிஎஸ்கே இடம் பிடித்தது ஏன் முக்கியமானது தெரியுமா. ஒருவேளை குவாலிபையர் 1 போட்டியில் தோற்றால், எலிமினேட்டர் ரவுண்ட் வாய்ப்பு கிடைக்கும். அதில் வென்று ஃபைனலுக்குள் வரலாம். ஆனால், குவாலிபையர் 2 போட்டியில் விளையாட வேண்டிய நிலை இருந்திருந்தால், தோற்றால் வெளியேதான் போக வேண்டும். ஆர்சிபி இப்போது அந்த நிலையில்தான் உள்ளது.

கோட்டை விட்ட ஆர்சிபி
நேற்றைய போட்டியில் ஹைதராபாத் நிர்ணயித்த 142 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. கடைசி வரை மிகவும் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் ஒருவேளை பெங்களூர் அணி வெற்றி பெற்றிருந்தால் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாக மாறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications