2 ஜாம்பவான்களை வீழ்த்திய இந்தியா.. பாகிஸ்தான் எம்மாத்திரம்.. தோனி மென்டார்ஷிப் சாதிக்குமா?
துபாய்: உலகக் கோப்பை டி 20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடக்க உள்ள ஆட்டம் இந்திய அணி க்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் ஆலோசகராக தோனி வந்திருப்பது அணிக்கு புதிய பலத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2021 உலகக் கோப்பை டி 20 தொடரின் முதல் ஆட்டமே இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்க போகிறது. இந்திய அணி வலுவான பாகிஸ்தானை முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது. நடந்து முடிந்த இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்தியா வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டது.
கோலி பவுலிங் போட்டும் கூட இந்தியாவை ஆஸ்திரேலியாவால் வீழ்த்த முடியவில்லை. ஆனால் இதெல்லாம் பயிற்சி ஆட்டம்தான். உண்மையான ஆட்டங்கள் தொடங்கும் போது களநிலவரம் வேறு மாதிரி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான்
வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில்.. பாகிஸ்தான் தானே.. எளிதாக அவர்களை வீழ்த்தி விடலாம் என்று இந்தியா தப்பு கணக்கும் போட முடியாது. ஏனென்றால் பாகிஸ்தான் இந்த முறை வலுவான அணிகளில் ஒன்றாக இருக்கிறது. பாகிஸ்தானின் டாப் ஆர்டர் பேட்டிங் ஒரு பக்கம் நன்றாக உள்ளது. இன்னொரு பக்கம் அந்த அணியின் பவுலிங் யூனிட்டும் சிறப்பாக உள்ளது. ஹசன் அலி, ஹபிஸ், ஷாகின் அப்ரிடி ஆகியோர் கண்டிப்பாக இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்கள்.

கேம் சேஞ்சர்
பாகிஸ்தானின் 3 முக்கியமான வீரர்கள் அந்த அணியின் கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். பாபர் அசாம், ரிஸ்வான், ஹபிஸ் போன்ற வீரர்கள் ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடியவர்கள். அதிலும் பாபரின் சமீபத்திய டி 20 ஸ்டிரைக் ரேட் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தேவையான போட்டியில் 40 பந்தில் 90 ரன்னும் அடிக்கிறார், நிதானமாக ஆட வேண்டிய போட்டிகளில் 40 பந்தில் 50 அடித்து சென்சிபிள் இன்னிங்க்ஸும் ஆடுகிறார். இதனால் பாபர் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானின் முக்கிய அஸ்திரமாக இருப்பார்.

இந்தியா என்ன செய்யும்
இதில் இந்தியாவிற்கு இரண்டு பெரிய சவால்கள் உள்ளன. முதல் விஷயம் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா பேட்டிங் பார்மிற்கு திரும்பவில்லை. அவர் பவுலிங்கும் செய்வதும் இல்லை. இப்படிப்பட்ட நேரத்தில் அவரை எடுத்தால் அவர் 5வது பவுலராக பவுலிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு பதிலாக ஷரத்துல் தாக்கூரை கொண்டு வரலாமா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

ஸ்பின்
இரண்டாவது சிக்கல் ஸ்பின் ஆப்ஷன். ஜடேஜா தனது பேட்டிங் காரணமாக ஆட்டோமெட்டிக்காக இந்திய அணிக்குள் வந்துவிடுவார். இன்னொரு ஸ்பின் பவுலர் அஸ்வினா, வருண் சக்ரவர்தியா என்ற கேள்வி உள்ளது. அஸ்வின் பயிற்சி ஆட்டங்களில் நன்றாக பவுலிங் செய்தார். இவர் மென்டர் தோனியின் முதல் சாய்ஸ். ஆனால் அரபு பிட்சில் வருண்தான் கிங். இதனால் இந்திய அணி இரண்டு பேரில் யாரை டிக் அடிக்கும் என்பது கேள்வியாக உள்ளது.

தோனி அறிவுரை முக்கியம்
இதில் இந்திய அணியின் 4 பெரிய தலைகளின் முடிவுதான் முக்கியமானதாக பார்க்கப்படும். இந்த குழப்பத்திற்கு சாஸ்திரி, தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் இணைந்து தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனிக்கு பயிற்சியாளருக்கு இணையான அதிகாரம் உள்ளது. இதனால் ஷரத்துல், பாண்டியா, அஸ்வின், வருண் ஆகிய நால்வரில் இரண்டு பேரை தோனி டிக் செய்வார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

இந்திய அணி
தோனியின் முடிவு இதனால் முக்கியத்துவம் பெறும். பாகிஸ்தானுக்கு எதிராக பெரும்பாலும் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, சூர்யா குமார் யாதவ், பண்ட், ஜடேஜா, பாண்டியா, ஷமி, வருண், அஸ்வின், பும்ரா ஆகியோர் ஆட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதிக ஸ்பின் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாத பட்சத்தில் அஸ்வினுக்கு பதிலாக கூடுதல் பாஸ்ட் பவுலராக ஷரத்துல் இறங்க வாய்ப்பு உள்ளது.

கோலிக்கு அறிவுரை
ரஹானே, ரோஹித், தோனி போல.. கோலி ஒன்றும் அதிக பவுலர்களுடன் செல்ல மாட்டார். 5 பவுலர்களை அவர் எடுப்பது அதிசயம்தான். ஆனால் தோனி வருகை. அணியில் நிலவும் அதிகார பகிர்வு காரணமாக பெரும்பாலும் இந்த தொடரில் இந்தியா கண்டிப்பாக 5 பவுலர்களுடன் களமிறங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் ஸ்பின் பவுலர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங், பவுலிங்?
துபாய் பிட்ச் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். ஐபிஎல் பைனல் இங்குதான் நடைபெற்றது. அதில் இரண்டாவது ஆடிய கொல்கத்தா வென்றது என்றாலும் இங்கு நிலவும் பனிப்பொழிவு இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும். இந்தியா ஒருவேளை டாஸ் வென்றால் பெரும்பாலும் இங்கு இரண்டாவது பேட்டிங் இறங்கவே நினைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications