“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்
துபாய்: அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகள் மீதும், அங்குள்ள அமெரிக்க படைகள் மற்றும் ராணுவ நிலைகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சவுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று, தனது தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா அவசர அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, இப்படியான அறிவிப்பு வெளியாவது இதுவே முதல் முறையாகும்.
சவுதி அரேபியாவில் உள்ள தங்கள் அமெரிக்க ஊழியர்களையும், தூதரக அதிகாரிகளையும் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்ன உத்தரவு?
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, அமெரிக்க அரசின் இத்தகைய கட்டாய வெளியேற்ற நடவடிக்கை அறிவிக்கப்படுவது இதுவே முதன்முறை. இங்குள்ள அமெரிக்க ஊழியர்களுக்கு முன்பு விருப்பத்தின் பேரில் வெளியேறலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இப்போது இது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ரியாதில் உள்ள தூதரகம் முக்கியப் பணியாளர்களுடன் செயல்படும் என்றும், இது தற்காலிக நடவடிக்கை என்றும் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தினார்.
விமான தாக்குதல்
ரியாதில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களாலேயே இந்த வெளியேற்றம் நிகழ்ந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை தூதரகம் இரண்டு ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.
பல மாதங்களாக தொடரும் போர்
அதற்கு முந்தைய நாள், பாரசீக வளைகுடா முழுவதும் உள்ள அரபு நாடுகள் ஈரானிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்தும் எதிர்கொண்டன. பல மாதங்கள் போரைத் தாங்கும் ஆற்றல் தங்களிடம் இருப்பதாக ஈரான் கூறியது.
எண்ணெய் விலை உயர்வு
இதற்கிடையில், இஸ்ரேல் தெஹ்ரானில் எரிபொருள் கிடங்குகளைத் தாக்கி, ஈரானின் மின் விநியோக அமைப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தது. டிரம்ப், தனது சமூக வலைதளப் பதிவில் ஈரான் நிபந்தனைகள் இல்லாமல் சரணடைய வேண்டும் என்று கோரினார். இது நீடித்த மோதல் குறித்த அச்சங்களை அதிகப்படுத்தி, பங்குச் சந்தைகள் சரிந்தன மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
இந்தியர் கொலையா?
இன்று அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில், பல ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. இருப்பினும் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியுள்ளன. இந்த தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் என்பதால், மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. முன்னதாக ஈரான் நடத்திய தாக்குதலில், சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications