ஈரோட்டில் சாப்பாடு தேடி வந்த 10 அடி நீள பாம்பு... வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்?
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு ஒன்று புகுந்து அதை துப்புரவு பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை பத்திரமாக மீட்டனர்.
தமிழகத்தில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக பாம்பு இனங்கள் குளிர்ச்சியான இடங்களை தேடி தஞ்சம் அடைகிறது. இந்த நிலையில் ஈரோடு பெருந்துறை சாலை பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு ஒன்று புகுந்து அதை துப்புரவு பணியாளர்கள் பார்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் பதுங்கி இருந்த பத்தடி நீளம் சாரை பாம்பை மீட்டு வனத்துறை மூலமாக அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு செல்ல ஒப்படைத்தனர். துப்புரவு பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பத்தடி நீளம் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பாம்பு கடித்து இரண்டு பேர் மரணம்
கேரளம் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஆங்காங்கே பாம்புகள் குடியிருப்பு, வீடுகளுக்குள் புகுந்து மனிதர்களை கடித்து வருவது அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் பாம்பு கடித்து 2 பேர் இறந்தனர்.
இடுக்கி மாவட்டம் காஞ்சார் பகுதியைச் சேர்ந்த 75 வயதாகும் என்பவர் தனது வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டிருந்த போது, பாறை இடுக்கில் இருந்து வந்த பாம்பு அவரை கடித்தது. பின்னர் அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார்.
இதேபோல கண்ணூர் மாவட்டம் தளிப்பரம்பு அருகே உள்ள பட்டுவத்து பகுதியில் நபிசா (70) என்பவரை நேற்று பாம்பு கடித்தது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கண்ணூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர்கள் 2 பேருக்கும் விஷ முறிவு தடுப்பூசி செலுத்தப்பட்ட போதிலும் உயிரிழந்தனர்.
அதேபோல் ஆலப்புழா மாவட்டம் காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செலினா (42). இவர் கடந்த 23-ந் தேதி வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கட்டு விரியன் பாம்பு அவரது காலில் கடித்தது. உடனே அவரை பெற்றோர் மீட்டு காயங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளித்தும், பலனின்றி செலினா உயிருழந்தார்.
கடந்த 19-ந் தேதி திருச்சூர் மாவட்டம் கோடாலி பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 சிறுவர்களை பாம்பு கடித்தது. அதில் ஆல் ஜாய் (8) என்ற சிறுவன் உயிரிழந்தான். அவனது சகோதரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை மாவட்டம் அன்னூரில் நாய்குட்டிகளை காப்பாற்றுவதற்காக பாம்பை தாக்கியவர், இறந்துவிட்டதா என்பதை அறிய தூக்கிய போது, அந்த பாம்பு கடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் ஈரோட்டில் வந்த பாம்பு மட்டும் விஷமற்ற சாரை பாம்பு.. மற்றவை விஷப்பாம்புகள்.. சாரை பாம்பு விவசாயிகளுக்கு நண்பன், இது எலிகளைப் பிடித்து உண்ணும். இது கடித்தால் லேசான காயம் மற்றும் ரத்தம் வருமே தவிர, உயிருக்கு ஆபத்து இல்லை என்கிறார்கள். இது மிகவும் நீளமாகவும், வேகமாக நகரக்கூடியதாகவும் இருக்கும். இதன் கண்கள் உருண்டையாகப் பெரியதாக இருக்கும்.
கேரளாவில் மற்றும் கோவை அன்னூரில் நடந்த பாம்பு கடி சம்பவங்களில், கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், நாகப்பாம்பு ஆகிய நான்கு பாம்புகளில் ஒன்றுதான் கடித்திருக்கும். கேரளா, தமிழ்நாட்டை பொறுத்தரை கட்டு விரியன் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்னூரில் கட்டு விரியன் தான் கடித்தது.
ஒருவேளை வீட்டைச் சுற்றி அல்லது வீட்டிற்குள் பாம்பு வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும். பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தேடி வந்து கடிக்காது. நாம் அதை மிதிக்கும்போதோ அல்லது அடிக்க முயலும்போதோதான் அது தற்காப்புக்காகக் கடிக்கிறது. பாம்பிடமிருந்து குறைந்தது 5-10 அடி தூரத்தில் இருங்கள். அது தானாகப் போக வழி விடுங்கள். பாம்பு எங்குச் செல்கிறது, எங்குப் போய் ஒளிந்து கொள்கிறது என்பதைத் தூரத்தில் இருந்தே கவனியுங்கள். அப்போதுதான் மீட்புப் படையினர் வரும்போது அவர்களுக்குச் சொல்ல எளிதாக இருக்கும். தீயணைப்புத் துறை அல்லது அங்கீகரிக்கப்பட்ட பாம்பு பிடிப்பவர்களுக்கு உடனே தகவல் கொடுங்கள்.
கோடை காலத்தில் வெப்பம் அதிகம் என்பதால். பாம்புகள் குளிர்ச்சியைத் தேடி வீட்டுக்குள் வரப் பார்க்கும். எவே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது அல்லது வீட்டைச் சுற்றியுள்ள புதர்களைச் சுத்தம் செய்யும்போது, காலில் 'கம் பூட்ஸ்' அணிந்து கொள்வது அல்லது ஒரு கம்பால் தரையைத் தட்டிக்கொண்டே செல்வது பாம்புகளை முன்கூட்டியே விலகிச் செல்ல உதவும்.














Click it and Unblock the Notifications