ஈரோடு கிழக்கு: களத்தில் 77 வேட்பாளர்கள்.. உக்கிரமான 4 முனைப் போட்டி- மீண்டும் வாகை சூடுமா 'கை'?
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இறுதியாக மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளிடையே பிரதான போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. அவர் திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். மொத்தம் 83 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அமமுக வேட்பாளர் உட்பட 6 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு, தேமுதிகவின் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மேனகா ஆகியோர் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021-ல் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகள்: காங்கிரஸ் திருமகவன் ஈவெரா - 67,300 (44.27%); தமாகா யுவராஜா- 58,396 (38.41%); நாம் தமிழர் கோமதி 11,629 (7.65%); மநீம ராஜ்குமார் 10,005 (6.58%); அமமுக முத்துக்குமரன் 1,204 (0.79%).
தற்போது திமுக கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் மநீம ஆதரிக்கிறது. நோட்டாவைவிட குறைந்த வாக்குகளைப் பெற்ற அமமுக இப்போது தேர்தல் களத்திலேயே இல்லை.
இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவின் சந்திரகுமார் 69,166; திமுகவின் எஸ். முத்துசாமி 58,522 வாக்குகளைப் பெற்றனர். தேர்தலில் வென்ற சந்திரகுமார் பின்னர் திமுகவில் இணைந்துவிட்டார். 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் தென்னரசு 64,879; திமுக அணியில் மக்கள் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட சந்திரகுமார் 57,085 வாக்குகள் பெற்றார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் முறையே 10, 644, 7794 வாக்குகள் என்பதுதான் வெற்றி வித்தியாசம். 2021 தேர்தலிலும் கூட 8904 வாக்குகள் வித்தியாசத்தில்தான் காங்கிரஸ் வென்றது. கடந்த தேர்தலில் சுமார் 10,000 வாக்குகளைப் பெற்ற நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்கிறது. இதனால் காங்கிரஸுக்கான வாக்குகள் சற்று கூடக் கூடும் என்பது பொதுவான கருத்து.
ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்ட போது முதன் முதலில் ஜெயித்த கட்சி தேமுதிக. இப்போது ஆனந்தன் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கில் திமுகவை ஜெயிக்க வைத்த சந்திரகுமார் 2 தேர்தல்களை சந்தித்தார். இரு தேர்தல்களிலுமே சுமார் 50,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். இப்போது சந்திரகுமார் திமுகவில் இணைந்துள்ளார். 2011 தேர்தலில் சந்திரகுமாரிடம் தோற்றவர் தற்போதைய அமைச்சர் முத்துசாமி. சந்திரகுமாரும் முத்துசாமியும் இப்போது இணைந்த கைகளாக ஒரே கட்சியில் உள்ளனர். இது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலம். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் உள்ள கட்சி. திமுக, அதிமுக கூட்டணிகளைத் தொடர்ந்து எப்படியும் அடுத்த இடத்தில் நாம் தமிழர் தொடர்ந்து நிற்கும். இம்முறையும் காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வாகை சூடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்கின்றன களநிலவரங்கள்.












Click it and Unblock the Notifications