திம்பம் மலைப் பாதையில் திடீரென தீப்பிடித்த கார்... அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, திம்பம் மலைப்பாதை 19-ஆவது கொண்டை ஊசி வளைவில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. எனினும், காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Recommended Video
தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில், 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வருவதற்கு இது முக்கிய பாதையாக உள்ளது. அதனால் எப்போதும் கார், லாரி, பேருந்து, வேன், இருசக்கர வாகனங்கள் சென்று வந்தபடி இருக்கும்.

சாதாரணமாக வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பி விடுகின்றன. ஆனால் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் சில நேரங்களில் நின்று விடுவதும், பழுதாகிவிடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத நாளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், இங்குள்ள வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி சாலையில் உலாவி வருவதும் உண்டு. வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகள், அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும், துரத்துவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், திம்பம் மலைப்பாதையில் இன்று மதியம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட காரில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உடனடியாக காரை விட்டு இறங்கி நாலாபுறம் சிதறி ஓடினர். கார் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக ஆசனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் கடுமையாக போராடி, தீப்பிடித்து எரிந்த காரை தண்ணீர் பீய்ச்சி அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications