சோகத்தில் மூழ்கிய ஊர்.. தம்பியை காப்பாற்ற முயன்ற அக்கா பலி... ஈரோட்டில் நடந்த துயரச் சம்பவம்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கோயில் திருவிழாவிற்கு வந்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் என்பவரின் மகள், புஞ்சைபுளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இவர்களுடைய உறவினர் ஆலம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மகன், குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் ராம்குமார் மகளுடனும், கிருஷ்ணசாமி மகனுடனும் கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் முருகேசன் என்பவர் வீட்டுக்கு சென்றார்கள்.
அப்போது மாணவியும், மாணவனும், அதே பகுதியை சேர்ந்த சிறுவர்-சிறுமிகளுடன் அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டையில் மீன் பிடிக்க சென்றுள்ளார்கள். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஆழமான பகுதிக்சு சென்றதால், அந்த சிறுமி தம்பியை காப்பாற முயன்றபோது, அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்த மற்ற குழந்தைகள் பயந்துபோய் செய்வதறியாது வீட்டுக்கு சென்று உறவினர்களிடம் கூறியுள்ளார்கள். உடனே அனைவரும் பதறி அடித்து சிவன் குட்டைக்கு ஓடிவந்தார்கள். எனினும், குட்டையில் இறங்கி தேடியபோது சிறுமியும், சிறுவனையும் சடலமாக மீட்டனர். இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications