5 வயது மகளுடன்.. தாய் எடுத்த பகீர் முடிவு.. காட்டி கொடுத்த செருப்பு.. கணவன் அதிர்ச்சி!
ஈரோடு: ஈரோடு அருகே 5 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் சேர்ந்தவர் விஸ்வநாதன், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரம்யா, இவர்களுக்கு 5 வயதில் பவன்யா என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் கணவர் வேலைக்கு சென்ற பின்பு வீட்டில் மகளுடன் இருந்தார் ரம்யா. இதனை தொடர்ந்து மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.

தற்கொலை
'அம்மா தன்னை கடைக்குதான் அழைத்து செல்கிறார்' என்று மகள் நினைத்துக் கொண்டாள். ஆனால் மகளுடன் அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றுக்கு சென்றார் ரம்யா. இதன்பின்பு அவர் மகளுடன் திடீரென கிணற்றில் குதித்தார். இதில் நீரில் மூழ்கிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அக்கம்பத்தினருக்கு தெரியவில்லை.

அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்
இதற்கிடையே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த விஸ்வநாதன், மனைவியும், குழந்தையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். முதலில் ''இருவரும் வெளியே சென்று இருப்பார்கள். வீட்டுக்கு வந்து விடுவார்கள்'' என்று நினைத்து இருந்தார். ஆனால் இருவரும் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பி வராததால் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

காட்டி கொடுத்த செருப்பு
அவர்களுக்கும் ஏதும் தெரியாததால் பல இடங்களில் மனைவியையும், குழந்தையையும் தேடினார். அப்போது கிணற்றின் அருகே ரம்யாவின் செருப்பு உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ரம்யா சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் சத்தம் போட்டார்.

என்ன காரணம்?
அக்கம்பத்தினர் உடனடியாக அங்கு வந்து கிணற்றில் குதித்து தாய், மகள் இருவரின் சடலத்தை மீட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரம்யா, குழந்தையுடன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? அவருக்கும், கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எவரும் ரம்யாவுக்கு நெருக்கடி கொடுத்தாரா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications