"கடந்த தேர்தலில் பணம் கொடுத்தும் தோல்வி அடைந்தோம்.. புரிஞ்சுக்கோங்க!" அதிமுக நிர்வாகி சர்ச்சை பேச்சு
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தல் பிரசார பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிமுக முன்னாள் துணை மேயரின் பேச்சு இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் பிப்.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் பிப். 22இல் அறிவிக்கப்பட உள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக
இதன் மூலம் மொத்தம் 12838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்பத் திட்டமிட்டுள்ளனர். அதிமுகவை பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் தனது கூட்டணியில் இருந்து இரண்டு கட்சிகளை இழந்துள்ளது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலேயே பாமக கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதேபோல கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றாகப் பயணித்து வந்த அதிமுக மற்றும் பாஜக இந்த முறை தனித்தனியாகப் போட்டியிடுவதாக அறிவித்தன.

அதிமுக திட்டம்
இதன் மூலம் அதிகப்படியான இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு அதிமுகவுக்குக் கிடைத்துள்ளது. தமிழக மாநில காங்கிரஸ், புரட்சி பாரதம் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கணிசமாக வாக்குகளைப் பெற முடியும் என அதிமுக நம்புகிறது. பொங்கல் பரிசு தொகுப்பின் தரம், நீட் விலக்கு உள்ளிட்டவை தொடர்பான விஷயங்களை அதிமுக முன்னிறுத்துகிறது.

ஈரோடு
வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், பிரசார பணிகளை அதிமுக தரப்பு தொடங்கியுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் சமயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

செங்கோட்டையன்
இந்தக் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "பொதுமக்களிடம் மீண்டும் அதிமுக தனது வலிமையை நிரூபிக்கச் சரியான வாய்ப்பாக இந்தத் தேர்தல் வாய்ப்பாக அமைந்துள்ளது. இது மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் நல்லவொரு வாய்ப்பாக அமையும். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்று, மேயர் பதவியைக் கைப்பற்றி ஈரோடு அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம்" என்றார்.

சர்ச்சை பேச்சு
இந்தக் கூட்டத்தில் முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி பேசிய பேச்சு தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் பேசிய கே.சி.பழனிசாமி, "கடந்த தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் கொடுத்தும் தோல்வி அடைந்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 200 ரூபாய் கொடுத்து அவர்கள் வென்றனர். பணம் தேர்தலில் பெரிதல்ல. வேட்பாளரும் அவரின் பணியுமே தான் தேர்தலில் பெரியது" என்றார். முன்னாள் அமைச்சர் முன்னிலையில் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் என்று முன்னாள் மேயர் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications