தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்பதால் என்னை மதிப்பதில்லை! மீண்டும் பரபரப்பை கிளப்பும் அதிமுக எம்.எல்.ஏ!
ஈரோடு: நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் என்னை வருவாய் துறை அலுவலர்கள் உட்பட அரசு அதிகாரிகள் யாரும் மதிப்பதேயில்லை என மீண்டும் பரபரப்பு புகாரை முன் வைத்திருக்கிறார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பண்ணாரி. எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியான இவர், தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் முன் வைத்து வருகிறார்.

அதாவது தனது தொகுதியில் உள்ள ஒரு அரசு அதிகாரிகள் கூட எம்.எல்.ஏ. என்ற முறையில் தன்னை மதிப்பதேயில்லை என்றும் தாம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதே இதற்கு காரணம் எனவும் வேதனைத் தெரிவிக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினரே இப்படி ஒரு புகாரை தெரிவித்திருப்பதால் இது சற்று சீரியஸான விவகாரமாகவே பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் பாகுபாடா அல்லது அவர் சொல்வது போல் ஜாதி தான் காரணமா என்பது குறித்தெல்லாம் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் தாம் பரிந்துரை செய்து கொடுத்த மனுக்களில் ஒரு மனு மீது கூட தீர்வு காணப்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக உள்ளது. இன்னும் 2 மாதங்கள் அரசு அலுவலர்களுக்கு கெடு விதித்துள்ள பண்ணாரி எம்.எல்.ஏ., அதன் பிறகு தன்னை உதாசீனப்படுத்தும் போக்கு தொடர்ந்தால் அரசு அலுவலகங்களில் மக்களுடன் குடியேறும் போராட்டத்தை நடத்துவேன் எனக் கூறி அதிர வைத்திருக்கிறார்.
அரசியல்வாதிகளை போல் அரசுப் பதவிகளில் உள்ள ஒரு சில அதிகாரிகளும் அரசியல் செய்வது இது போன்ற குற்றச்சாட்டுகள் மூலம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications