ஆட்சி மாறும்! காட்சி மாறும்! எதிர்வினையை சந்திப்பீர்கள்! அரசு அதிகாரிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை!
அரசு அதிகாரிகள் மீதான கோபத்தை வெளிப்படுத்திய எடப்பாடி பழனிசாமி.
ஈரோடு: தமிழ்நாட்டில் ஆட்சியும் மாறும் காட்சியும் மாறும் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி நடுநிலை தவறும் அரசு அதிகாரிகள் எதிர்வினையை சந்திப்பார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர் இதனைக் கூறினார்.
எதிரணியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் தேர்தல் அன்று இரட்டை இலை சின்னம் மட்டுமே மக்களின் கண்களுக்கு தென்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, அரசு அதிகாரிகள் மீதான தனது கோபத்தை கொட்டித்தீர்த்தார். ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்று இரண்டு முறை மீண்டும் மீண்டும் கூறிய அவர், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் எனக் கூறினார். நடுநிலை தவறும் அரசு அதிகாரிகள் அதற்குரிய எதிர்வினையை சந்திப்பீர்கள் என பகிரங்கமாக எச்சரித்தார்.

நிர்வாகிகள் புகார்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தங்களுக்கு அதிகாரிகளும், அரசு அலுவலர்களும் பல்வேறு நெருக்கடிகளை கொடுப்பதாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் புகார் கூறியதன் விளைவாகவே எடப்பாடி பழனிசாமி இப்படி கோபப்பட்டிருக்கிறார். இதனிடையே திமுகவினர் ஆயிரக்கணக்கில் வீடு வீடாக சென்று பணம் கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, எதிரணியினர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாங்கிக் கொள்ளுமாறும் ஏனெனில் அது மக்கள் பணம் தான் எனவும் தெரிவித்தார்.

ஜிகே வாசன்
அரசு அதிகாரிகள் பற்றியும், அரசு குறித்தும் கோபமுடன் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த நேரம் பார்த்து ஜிகே வாசன் மேடையேறினார். இதையடுத்து அப்படியே கோபத்தை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு பேச்சை நிறுத்தி ஜிகே வாசனை புன் சிரிப்புடன் வரவேற்றார் எடப்பாடி பழனிசாமி. வாசனும் பதில் வணக்கம் வைத்துவிட்டு நீங்க பேச்சை தொடருங்க எனக் கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார்.

விசைத்தறி
பொங்கலுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைக்கான ஆர்டர்களை அரசு ஈரோடு பகுதியில் உள்ள விசைத்தறி நெசவாளர்களுக்கு கொடுக்காததால் விசைத்தறி இயந்திரங்களை எடைக்கு போட வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளதாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications