''இலவு காத்த கிளிகளை போல் 3 அமைச்சர்கள்''! ''திமுக கேபினெட்டே காலியாகிவிடும்''! அண்ணாமலை பேச்சு!
ஈரோடு: இலவு காத்த கிளிகளை போல் தமிழக அமைச்சரவையில் உள்ள 3 சீனியர் அமைச்சர்கள் ஸ்டாலினிடம் முக்கிய துறையை எதிர்பார்த்து காத்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் நடைபெற்ற பாஜக அரசின் 9ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் இப்போதே பொதுக்கூட்டம், மாநாடு, என பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார் அண்ணாமலை.வரும் டிசம்பர் மாதமே தேர்தல் நடைபெற்றாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரெங்கும் பிரதமர் மோடி கொண்டு வந்த திட்டங்களை பட்டியல் போட்டு வருகிறார். அந்த வகையில் மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆகிய மூன்று அமைச்சர்களையும் கலாய்த்தார்.
இவர்கள் மூன்று பேரும் ஸ்டாலினிடம் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு நடிப்பதாகவும் டாஸ்மாக் துறை தங்கள் கைகளுக்கு வந்துவிடாதா என அவர்கள் இலவு காத்த கிளிகள் போல் காத்திருப்பதாகவும் விமர்சித்தார். ஊழல் புகார் இருக்கும் எல்லோர் மீதும் ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா என கேட்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் என சீறிய அண்ணாமலை, அப்படி மட்டும் ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்க முன்வந்தால் திமுக அமைச்சரவையே வெளியே போய்விடும் என பேசினார்.

இதனிடையே இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அண்ணாமலையுடன் செல்ஃபி எடுப்பதற்காக பாஜகவினர் பலரும் போட்டி போட்டு மேடையேறினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவை பயன்படுத்தி கூட்டநெரிசலில் 9 பேருடைய பர்ஸ் திருடுபோனது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications