ஈவிகேஎஸ் இளங்கோவன் பெண்களை எப்படி மதிப்பார் தெரியுமா? போய் விஜயதாரணியிடம் கேளுங்கள்! அண்ணாமலை பேச்சு
வாக்காளர்களின் மை காயும் முன்பே ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னைக்கு சென்றுவிடுவார்- அண்ணாமலை
ஈரோடு: வாக்காளர்கள் மை காயும் முன்பே ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை சென்றுவிடுவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசுவும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன், நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இடையன்காட்டுவலசு பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

வெந்த புண்ணில் வேல்
அப்போது அவர் பேசுகையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் நெசவாளர்களுக்கு 80 சதவீதம் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும் அவர் கூறுகையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் ஆன நிலையில் தினமும் புதுவிதமான பிரச்சினைகளை அரசு கொடுத்து வருகிறது.

33 அமைச்சர்கள்
33 அமைச்சர்களும் மக்களை எப்படி அடக்கலாம். எப்படி பொய் வாக்குறுதி கொடுக்கலாம் என யோசிக்கிறார்கள். திமுக 22 மாத ஆட்சியில் சம்பாதித்ததை மக்களுக்கு கொடுத்தால் வெற்றி பெறலாம் என கற்பனையுடன் வலம் வருகிறார்கள். தற்போது விசைத் தறியாளர்களுக்கு 1000 யூனிட் இலவசமாக தரப்படும் என சொல்வது வெட்கக்கேடானது.

வாக்காளர்கள்
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கும் மை காயும் முன்பே இளங்கோவன் சென்னைக்கு சென்று விடுவார். திமுகவின் கூட்டணி தர்மம் சந்தி சிரிக்கிறது. இளங்கோவன் ஏழை மக்களுக்கானவர் அல்ல, தென்னரசு வெற்றி பெறும் போது திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்க முடியும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

இளங்கோவன்
அப்படியிருக்கும் போது தனது கட்சியில் உள்ள பெண்களை இளங்கோவன் எப்படி நடத்துவார் என்பதை விஜயதாரணியிடம் கேட்டு பாருங்கள். பல மாதங்களாகியும் குரூப் 4 தேர்வு முடிவுகள் ஏன் வெளியிடப்படவில்லை. வேலைவாய்ப்பு குறித்த எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. 30 ஆண்டுகாலமாக தலைநிமிர்ந்து இருந்த காவல் துறை தற்போது திமுக ஆட்சியில் கைகள் கட்டப்பட்டுள்ளன.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக இன்று ஏராளமான பெண்களின் தாலி இறங்க காரணமாகிவிட்டது. திருமங்கலம் பார்முலா, அரவக்குறிச்சி பார்முலா போல் ஈரோடு பார்முலா என இந்த தொகுதிக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்திவிடாதீர்கள் என திமுக கூட்டணி கட்சியினரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் தொகுதியில் திமுக கூட்டணியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications