நீதான்யா பெரிய மனுஷன்.. ரோட்டில் கிடந்த 2 ரூபாய்! 55 வருஷத்துக்கு அப்பறம் உண்டியலில் விழுந்த ‘கவர்’
ஈரோடு: கோவில் உண்டியல்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். அப்படித்தான் ஈரோடு செல்லாண்டியம்மன் கோவிலிலும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தார்கள். ஆனால், அதில் இருந்த ஒரு கடிதத்தை பார்த்தபோது ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர் கோவில் ஊழியர்கள். காரணம் 55 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுத்த இரண்டு ரூபாய்க்காக 10,000 ரூபாய் பணத்தை காணிக்கையாக செலுத்தி இருக்கிறார் ஒரு பக்தர்.
தமிழகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் இருக்கிறது. பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், திருச்சி சமயபுரம் கோவில் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த கோவில்களில் எல்லாம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் கோவில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி, தானியங்கள் மற்றும் தங்கள் வேண்டிய பொருட்களை செலுத்துவார்கள். உண்டியல் நிரம்பியதும் அந்த பொருட்களை கோவில் ஊழியர்கள் எண்ணுவது வழக்கம்.

தொடர்ந்து அந்த நிதி கருவூலத்தில் செலுத்தப்பட்டு கோவில் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும். சில நேரங்களில் கோவில் உண்டியல்களில் வித்தியாசமான பொருட்கள் இருக்கும். தங்க பேனா, செல்போன், வீட்டு பத்திரங்கள் ஆகியவை கூட கிடைக்கும். அதைவிட வினோதமான பொருட்களும் கோவில் உண்டியல்களில் அவ்வப்போது தென்படும். அப்படி ஒரு கவர் தான் ஈரோடு செல்லாண்டியம்மன் கோவிலில் கிடைத்திருக்கிறது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெருஞ்சிப்பேட்டை பகுதியில் நூறாண்டுகள் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையில் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கோவில் உண்டியலை என்னும் பணி நடைபெற்றது. அந்த இந்த பணியில் கோவில் ஊழியர்கள், அதிகாரிகள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அந்த உண்டியலில் ஒரு வெள்ளை கவர் இருந்தது. அதில் ஒரு கட்டாக 500 ரூபாய் தாள்கள் இருந்தது. எண்ணிப் பார்த்த போது அதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அந்த கவருடன் ஒரு கடிதமும் இருந்தது அந்த கடிதத்தில், கடந்த 55 ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்த நான் கீழே 2 ரூபாய் கிடந்தது. அந்த பணம் யாருக்கு உரியது என நான் தேடிய போது யாருமே அந்த பணத்துக்கு உரிமை கோரவில்லை.
அந்த பணத்துக்கு உரிய நபரிடம் ஒப்படைக்க முடியாததால் நானே அந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டேன். தற்போது 55 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த கோயிலுக்கு வந்திருக்கிறேன். கண்டெடுத்த இரண்டு ரூபாய்க்கு ஈடாக இன்றைய தேதி வரை தோராய மதிப்பாக பத்தாயிரம் ரூபாயை காணிக்கையாக செலுத்துகிறேன்" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தில் பெயர் முகவரி ஆகிய எதுவுமே இல்லை. மொத்தமாக உண்டியல் எண்ணிக்கையில் 62 ஆயிரம் ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ரூபாய்க்கு பதிலாக 55 ஆண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாயை கோவில் உண்டியலில் செலுத்தி இருக்கிறார் அந்த பக்தர். உண்மையிலேயே அவர் மிகவும் வித்தியாசமானவர் ஆனால் யார் என்று தான் தெரியவில்லை. ஒருவேளை வேண்டுதலுக்காகவோ அல்லது விளையாட்டுக்காகவோ கூட அவர் இப்படி செய்திருக்கலாம் என கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications