ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் vs ஈஸ்வரமூர்த்தி... மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கல்தா..!
ஈரோடு: சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடே முடிவடையாத சூழலில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவதற்காக காங்கிரசும், அதிமுகவும் வரிந்துகட்டிக் கொண்டு களப்பணிகளை தொடங்கிவிட்டன.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மொடக்குறிச்சியில் களமிறங்குவார் எனத் தெரிகிறது.
இதனிடையே அவரை எதிர்த்து அதிமுக சார்பில் எழுமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி போட்டியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
மொடக்குறிச்சி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா சமீபகாலங்களாக ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் களப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். அந்த வகையில் மொடக்குறிச்சியில் அவரே போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சிட்டிங் எம்.எல்.ஏ.
இதனிடையே அதிமுகவில் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள வி.பி.சிவசுப்பிரமணியத்திற்கு மீண்டு வாய்ப்பு கொடுக்க இ.பி.எஸ்.தரப்பு தயங்குவதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த 2017-ம் ஆண்டு அதிமுகவில் உருவான சர்ச்சையின் போது டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய எம்.எல்.ஏ.க்களில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியமும் ஒருவர். இதனால் மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.
ஊராட்சி தலைவர்
இந்த தேர்தலில் ஜெயலலிதா பாணியில் லைம் லைட்டில் இடம்பெறாத நபர்களை வேட்பாளர்களாக களமிறக்க முடிவுசெய்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்த வகையில் எழுமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தியை மொடக்குறிச்சியில் நிறுத்தி காங்கிரஸை எளிமையாக வென்றுவிடலாம் என அவர் கணக்கு போட்டிருக்கிறார். காரணம் ஈஸ்வரமூர்த்திக்கு அப்பகுதியில் உள்ள தனிப்பட்ட செல்வாக்கு.
ஈரோடு மாநகர்
இந்நிலையில், செல்வகுமார சின்னையன், ஆர்.பி. கதிர்வேல், என அதிமுகவில் பலரும் சீட் எதிர்பார்த்தாலும் தற்போதைய சூழலில் முதல்வரின் நம்பிக்கையை பெற்றவராக இருக்கிறார் ஈஸ்வரமூர்த்தி. இதனிடையே மொடக்குறிச்சியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.