தமிழகம்.. ஆளே போக கஷ்டப்படும் ஊரு.. தார் ரோடு கூட இல்லாத மலை கிராமத்திற்குள்ளும் பரவிய கொரோனா
ஈரோடு: அடர்ந்த வனப் பகுதிக்குள், ஆள் செல்லவே கஷ்டப்படும் இடங்களில் கூட கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் அருகே அடர்ந்த காட்டுப் பகுதியான தெங்குமரஹாடா வசிக்கும் 25 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமரஹாடா கிராமம் உள்ளது.
சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அடர்ந்த காட்டுப் பகுதியில் மண் பாதையில் பயணிக்கும் நிலையில்தான் உள்ளது இந்த ஊர். தற்போது பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டது.
இப்படி எளிதாக செல்ல முடியாத இடத்தில் கூட கொரோனா பரவியுள்ளது. சளி, காய்ச்சல் இருந்ததால் அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து உள்ளனர் சிலர். இந்த பரிசோதனையில், 2 குழந்தைகள் உட்பட 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
லேசான அறிகுறி உள்ள 22 பேர் கிராமத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் ஆற்றைக் கடந்து கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நோய் மேலும் பரவாமல் இருக்க 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல், சளித் தொந்தரவு குறித்து மருத்துவ குழுவினர் பதிவு செய்து வருகின்றனர்.