கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து, விரைவான விசாரணை மூலம் உச்சகட்ட தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்துதல் மற்றும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்கான விழிப்புணர்வுப் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

CM Joseph Vijay

உலுக்கும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், "பாலியல் குற்ற வழக்குகளைத் தொய்வின்றி, மிக விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்குத் தாமதமின்றி நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். சட்டம் தன் கடமையை மிகத் தீவிரமாகச் செய்கிறது என்ற பயம் சமூக விரோதிகளுக்கு வர வேண்டும். நாம் பெற்றுத்தரும் தண்டனையானது, எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோருக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும், நடுங்க வைக்கும் பாடமாகவும் இருக்க வேண்டும்" என்று மிகக் கடுமையான தொனியில் அறிவுறுத்தினார்.

வழக்குகளை முறையாகக் கையாள்வது, குற்றப்பத்திரிகைகளை (Charge Sheet) உரியக் காலத்திற்குள் தாக்கல் செய்வது மற்றும் நீதிமன்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு சாட்சியங்களை வலுவாக முன்வைப்பது போன்ற சட்டரீதியான அனைத்து வழிமுறைகளையும் காவல்துறை முழு வீச்சில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

என்கவுண்டர் அச்சத்தில் குற்றவாளிகள்? பரபரக்கும் அரசியல் களம்

முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அவர் காட்டி வரும் சமரசமற்ற போக்கும் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடுமையான குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் மற்றும் பெண்களுக்கு எதிராகக் கொடூரமாக நடந்துகொள்ளும் சமூக விரோதிகள் மீது காவல்துறை கடுமையான 'என்கவுண்டர்' (Encounter) உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தருவதோடு, குற்றங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற அரசின் தீவிரப் போக்கின் காரணமாக, சட்டம்-ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு போன்ற தீவிரமான அஸ்திரங்களையும் கையில் எடுக்கக் கூடும் என்று அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இதனால் குற்றப் பின்னணி கொண்ட பல அசாடாஸ்கள் தற்போது கலக்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார் இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சு. மணிவாசன் இ.ஆ.ப., மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி மரியம் பல்லவி பல்தேவ் இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் இ.கா.ப., சட்டம்-ஒழுங்கு கூடுதல் இயக்குநர் (ADGP) மகேஷ்வர் தயாள் இ.கா.ப. ஆகியோர் கலந்துகொண்டு தங்களின் துறை சார்ந்த செயல்பாடுகளை விளக்கினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் இயக்குநர் திருமதி அனிதா சைன் இ.கா.ப., அதே பிரிவின் காவல்துறை தலைவர் (IGP) திருமதி சி. ராஜேஸ்வரி இ.கா.ப., உளவுத்துறை (Intelligence) காவல்துறை தலைவர் திரு. ஆஸ்ரா கார்க் இ.கா.ப. மற்றும் 'சிங்கப்பெண்' பிரிவின் காவல்துறை தலைவர் திருமதி கே. பவானீஸ்வரி இ.கா.ப. உள்ளிட்ட பல முக்கிய அரசு உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சரின் உத்தரவுகளைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியீடு

இந்த கூட்டத்தின் முடிவுகள் மற்றும் முதலமைச்சரின் உத்தரவுகள் அடங்கிய அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை சென்னை, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த அரசு எள்ளளவும் பின்வாங்காது என்பதை முதலமைச்சரின் இன்றைய ஆலோசனைக் கூட்டம் மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது. காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+