என்னமோ நடக்குது? ஈரோட்டில் இரிட்டேட் ஆன ஏஜெண்ட்ஸ்! அடுத்தடுத்து ஆஃப் ஆன CCTV..ஆட்சியர் தந்த விளக்கம்
ஈரோடு: ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி இரண்டாவது முறையாக பழுது ஏற்பட்ட நிலையில் அது உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிசிடிவி செயல்பட்டதாகவும் டிஸ்ப்ளேக்கு வரும் ஒயரில் ஏற்பட்ட பிரச்சனையே தொழில்நுட்ப கோளாருக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருக்கிறார்.
18வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் உள்ளிட்ட சில தொகுதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்ற நிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி பழுது: அங்கு காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இது மட்டுமல்லாமல் அரசியல் கட்சிகளின் முகவர்களும் அங்கு சுழற்சி முறையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தன. அதிக வெப்பம் காரணமாக சாட் சர்க்யூட் ஏற்பட்டு கேமராக்கள் செயல் இழந்ததாகவும் பிரச்சனை எதுவும் இல்லை கட்சியினரை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்க தயார் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஈரோட்டில் பழுது: இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சித்தோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்து இருந்தார். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் இன்று மீண்டும் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிசிடிவி செயல்படவில்லை என முகவர்கள் புகார் தெரிவித்தனர். ஒரே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடுத்தடுத்து சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு அரசியல் முகவர்களையும் ஆத்திரத்தில் ஆழ்த்தியது.
மீண்டும் பழுது: இன்று காலை சுமார் 8 மணியளவில் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அளவில் தான் இந்த பழுது ஏற்பட்டது. இதை அடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த டிஸ்ப்ளே ஆனது சரி செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் விளக்கமளித்திருக்கிறார்.
ஆட்சியர் விளக்கம்: அதில் சித்தோடு அரசு கல்லூரியில் அமைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூம் டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் தான் பழுது ஏற்பட்டது எனவும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பழுது ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராங் ரூமில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லும் வயர் இணைப்பில் பழுது காரணமாக டிஸ்ப்ளே கோளாறு ஏற்பட்டதாகவும், அதே நேரத்தில் சிசிடிவி பதிவுகள் இருப்பதாகவும் டிஸ்ப்ளே மட்டுமே தெரியவில்லை என விளக்கம் அளித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications