"பெரியாரின் கொள்கைகளை தூக்கிப்பிடிக்கும்.. மகத்தான தலைவர் நமது முதல்வர்!" புகழ்ந்து தள்ளிய ஆ.ராசா
ஈரோடு: சாதி மறுப்பு திருமண விழாவில் பங்கேற்ற நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார்.
தந்தை பெரியார் திராவிட கழக மாவட்டச் செயலாளர் குமரகுருபரனின் இல்ல சாதி மறுப்பு திருமண விழா ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்தார்.

சாதி மறுப்பு திருமணம்
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, " நாடு இப்போது ஆபத்தான சூழலில் உள்ளது. சாதி மறுப்பு திருமணத்தை நடத்தவும். அவ்வளவு ஏன் இது தொடர்பாக அரசியல் கட்சிகள் பேசவும் கூட தயங்கும் காலம். வட இந்தியாவில் கலப்பு திருமணத்தை ஊக்குவிப்போம் என்று கூட எந்தவொரு அரசியல் கட்சியும் கூற முடியாத சூழல் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பெரியாரால் மட்டுமே இது சாத்தியமானது.

ஏன் தனியாக செயல்படுகிறீர்கள்
பக்தி மனிதனைப் பக்குவப்படுத்த அல்ல. ஒரு இனம் வாழ்வதற்காக இந்து மதம் என்ற பெயரால் மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. நாடாளுமன்றத்தில் வட இந்திய எம்பிகள் ஏன் தனித்து இருக்கிறீர்கள் என எங்களைப் பார்த்துக் கேட்கின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எம்பிகளின் பின்னாளும் சாதி உள்ளது. ஆனால், தமிழக எம்பிகள் யாரும் எந்த சாதி என்பது பெயரை வைத்துக் கண்டுபிடிக்க முடியாது.

ராகுல் காந்தி
அனைத்து தரப்பு நலனுக்காகப் பாடுபடுவதால் நாங்கள் தனித்து இருக்கிறோம் என்று விளக்கம் தருவேன். சமீபத்தில் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி தமிழகம் மற்றும் கேரளாவில் பாஜகவால் ஆட்சி செய்ய முடியாது என சாடி இருந்தார். பெரியாரியமும் மார்க்சியமும் இருப்பதால் இந்த மண்ணில் அவர்களால் ஊடுருவ முடியாது. பொருளாதார ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக முன்னேறி மேலே வர வேண்டும் என்ற எண்ணம் திமுகவுக்கு உள்ளது. அப்படிப்பட்ட உணர்வோடு இந்த திருமண விழாவில் நான் கலந்து கொள்கிறேன். பெரியாரின் கொள்கைகள் இன்னும் வாழ வேண்டும். சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடைபெற வேண்டும்.
Recommended Video

பெரியாரின் கொள்கைகளைத் தூக்கிப்பிடிக்கும் தலைவர்
முதல்வரைக் கண்டு முதலில் பலரும் சந்தேகம் தெரிவித்தனர். அவர் நல்ல மேயர், நல்ல சட்டசபை உறுப்பினர், நல்ல அமைச்சர், நல்ல நிர்வாகி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் பெரியாரியவாதியாக இருப்பாரா என்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியைப் போல பெரியாரியவாதிய கொள்கைகளைப் பின்பற்றுவாரா என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்த பலரும் கூட முதலில் சந்தேகித்தனர். ஆனால், இன்றைய தினம் பெரியாரின் கொள்கைகளைத் தூக்கிப்பிடிக்கும் மகத்தான தலைவராக நமது முதல்வர் ஸ்டாலின் உள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications