எடப்பாடி போட்ட பிளான்.. சத்தமே இன்றி "ஸ்மூத்தாக" காரியத்தை சாதித்த ஸ்டாலின்.. இப்படி ஆகிடுச்சே!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பெரிதாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாமல் திமுக அந்த தொகுதியை காங்கிரஸுக்கே வழங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி விரைவில் இந்த தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்கும்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. 34 நாட்களில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடக்கும் என்று இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.

காங்கிரஸ்
இது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இதனால் மீண்டும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பெரிதாக பேச்சுவார்த்தை எதையும் நடத்தாமல் திமுக அந்த தொகுதியை காங்கிரஸுக்கே வழங்கி உள்ளது. இதற்காக பெரிதாக திமுக எதையும் யோசிக்காமல், ஆளும் கட்சி நாங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லாமல் காங்கிரசுக்கு மரியாதை கருதி இடம் கொடுத்துள்ளது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டும், லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும், சட்டசபையில் கூடுதல் எம்எல்ஏ வேண்டும் என்றெல்லாம் வாதம் வைத்து இடத்தை கேட்காமல், திமுக இங்கு காங்கிரசுக்கு மீண்டும் இடம் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் - திமுக
காங்கிரஸ் திமுக உறவை உறுதி செய்யும் விதமாக இந்த முடிவு பார்க்கப்படுகிறது. இரண்டு தரப்பிற்கும் உள்ள புரிதலை இது காட்டுகிறது. முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முயன்று வருவதாக கூறப்படும் எடப்பாடி தரப்பிற்கு இந்த செய்தி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாக போவதாகவும்.. இரண்டு கட்சிகளை சேர்ந்த முக்கிய சில தலைகள் இதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலையும், சட்டசபை தேர்தலையும் பாஜக - அதிமுக ஒன்றாக கூட்டணி அமைத்துதான் சந்தித்தன. இதில் லோக்சபா தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. அதிமுகவில் ஓ பி ரவீந்திரநாத் மட்டும் வெற்றிபெற்றார்.

உறவு சரியில்லை
அதன்பின் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு 4 எம்எல்ஏக்கள் என்று அதிமுக கூட்டணி 60+ இடங்களை வென்று நம்பிக்கை அளித்தது. ஆனால் அதன்பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி இன்றி தனி தனியாக போட்டியிட்டன. பாஜக தன்னை அடிமட்ட அளவில் வளர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இப்போது பாஜக - அதிமுக இடையே உறவு சரியில்லை. எடப்பாடி பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சிவி சண்முகம் கூட பாஜக - திமுக கூட்டணி வைக்க போவதாக கூறினார். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி உடைய போகிறது என்பதை இவர் சொல்லாமல் சொல்கிறார் என்று சிலர் விமர்சனங்களை வைத்தனர்.

கூட்டணி உடையும்
சிவி சண்முகத்தின் இந்த பேச்சை எடப்பாடி மறுக்காமல் இருந்ததும் கூட எடப்பாடி காங்கிரசுடன் செல்ல திட்டமிடுகிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது. அதோடு சமீபத்தில் அமித் ஷா தமிழ்நாடு வந்த போது கூட, அவரை வரும்போதெல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று எடப்பாடி கூறியது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2026ல் இதன் மூலம் அதிமுக ஆட்சிக்கு வர முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்கு பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கூடாது என்று எடப்பாடி நம்புகிறார். பாஜகவை தோளில் சுமப்பது தேவையற்றது என்று நினைக்கிறார். இதற்காக பாஜகவை கழற்றிவிட பார்க்கிறார். காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் வாக்குகள் கிடைக்கும் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.

காங்கிரஸ்
அதோடு காங்கிரஸில் இருக்கும் அரசியல் ஆலோசகர் ஒருவர் எடப்பாடிக்கு நெருக்கம். இவர் முன்பு எடப்பாடிக்காக வேலை பார்த்தவர். அவர் மூலம் காங்கிரஸ் - திமுக கூட்டணியை முறித்து காங்கிரஸ் - அதிமுக கூட்டணியை உருவாக்க எடப்பாடி முயன்று வருவதாக எல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வந்தன. இவர்கள் மூலம் எடப்பாடி காய் நகர்த்தி வருவதாக கூறப்பட்டது. 2024 லோக்சபா தேர்தல் அல்ல.. 2026 சட்டசபை தேர்தல்தான் எடப்பாடி குறி என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விவாதங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. இவர்கள் மிகவும் ஸ்மூத்தாக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். இருவருக்கும் இடையில் உள்ள புரிதலை இது காட்டுகிறது. கிட்டத்தட்ட எடப்பாடி கனவிற்கு ஸ்டாலின் வைத்த செக்காக இது பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்பு அதிமுக பாஜக கூட்டணியிலேயே இருக்குமா.. இல்லை பாஜகவை கழற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications