ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஸ்டாலின் வைத்த கோரிக்கை.. திமுகவே போட்டியிடும் என காங்கிரஸ் அறிவிப்பு
ஈரோடு: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது எனவும், திமுகவே போட்டியிடும் என அறிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர்14ஆம் தேதி உயிரிழந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:
அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் போட்டி?:
பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் பத்தாம் தேதியிலிருந்து வேட்பு மனு தாக்கல் தொடங்க இருக்கும் நிலையில் இன்னும் யார் போட்டியிடுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்தத் தேர்தலில் திமுகவே போட்டியிடலாம் எனவும் கூறப்பட்டது திமுகவுக்கு வந்த சந்திரகுமார் அங்கு வேட்பாளராக களம் இறக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது.

காங்கிரஸ் போட்டியில்லை:
இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாது எனவும், திமுகவே போட்டியிடும் என அறிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
திமுக வேட்பாளர்:
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

பெரும் வெற்றி:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றினைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications