"பலவீனமான தலைமை" திமுகவின் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம்.. மா.சுப்பிரமணியன் புது விளக்கம்!
எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஈரோடு: கடந்த தேர்தல்களில் திமுக பெற்ற வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமியின் பலவீனமான தலைமையே காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெறப் போகும் மகத்தான வெற்றிக்கும் எடப்பாடி பழனிசாமியே காரணமாக இருக்கப் போகிறார் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. இதற்காக அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்
இதில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி, முத்துசாமி, நாசர், மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கிழக்கு தொகுதியின் கிருஷ்ணம்பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மா.சுப்பிரமணியன் பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளது. கடைசி நாள் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றிபெற செய்யும் முனைப்புடன் இருக்கிறார்கள். விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது போல் நிச்சயம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார்.

உட்கட்சி பிரச்சினை
தொடர்ந்து ஓபிஎஸ் மீது திமுகவின் பி டீம் என்று அதிமுகவினர் கூறுவது பற்றிய கேள்விக்கு, திமுகவுக்கு பி டீமோ, சி டீமோ தேவையில்லை. ஏனென்றால் திமுக எப்போதும் நம்பர் ஒன் டீம். திமுகவை பொறுத்தவரை அரசியல் வரலாற்றில் சிறப்பான இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. அதனால் யாரும் பி டீமாகவோ, சி டீமாகவோ செயல்பட வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தார். பின்னர் உச்சநீதிமன்றம் பற்றிய கேள்விக்கு, அதிமுக அவர்களின் கைகளில் உள்ளது.

திமுகவுக்கு இபிஎஸ் ஆதரவு
எடப்பாடி பழனிசாமி உட்கட்சி பிரச்சினையில் வெற்றிபெற்றுள்ளார். அவர்களுக்குள் எழுந்த சண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது. அதற்கு வைத்திலிங்கம் மீண்டும் மேல்முறையீடு செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார். இதில் என்ன வெற்றி வந்துள்ளது. எதில் பலம் கூடியுள்ளது என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார். திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுவதாக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமியும் திமுகவுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்.

பலவீனமான தலைமை
ஏனென்றால் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என கடந்த தேர்தல்களில் இரட்டை இலையை வைத்துக் கொண்டு தான் தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டார். அவரது பலவீனமான தலைமை தான் திமுகவின் வெற்றிக்கு அடிப்படை. எனவே திமுகவின் வெற்றிக்கு முதல் காரணமே எடப்பாடி பழனிசாமி தான். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெறப் போகும் மகத்தான வெற்றிக்கும் எடப்பாடி பழனிசாமியே காரணமாக இருக்கப் போகிறார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications