இதுக்கு ஒரு ‘எண்டு’ இல்லையா? எடப்பாடி பல்டி.. 5வது முறையாக மாறிய அதிமுக பேனர்.. உள்ளே வந்த அண்ணாமலை!
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை பேனரை மாற்றிக்கொண்டே இருப்பார்களோ என முணுமுணுக்கிறார்கள் ஈரோடு மக்கள்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைத்துள்ள தேர்தல் பணிமனையில் 5வது முறையாக பேனர் மாற்றப்பட்டுள்ளது. தற்போது பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் படமும் இடம்பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் பணிமனையை அமைத்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், திறந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர். அன்று மாலையே அதில் ஸ்டிக்கர் ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணி என மாற்றினர். அடுத்த நாள் காலை அந்த பேனரும் மாறியது.
கடந்த 4 முறை வைக்கப்பட்ட பேனர்களில் பாஜக தலைவர்களின் படங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் தற்போது 5-வது முறையாக அவர்களுடைய படங்களையும் சேர்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இரு தரப்புமே வேட்பாளர்களை அறிவித்தனர். ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களால் தென்னரசு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார்.

பேனர் மாற்றும் படலம்
முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தரப்பு ஈரோட்டில் பெருந்துறை சாலையில் தேர்தல் பணிமனையை அமைத்தபோது அதிமுக தலைமையிலான கூட்டணி என்று இருந்தது. பிப்ரவரி 1ஆம் தேதி அதிமுக ஈபிஎஸ் அணி தங்கள் தேர்தல் அலுவலகத்தில் பாஜக தலைவர்களின் படங்கள் இல்லாமல் "தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி" என்ற தலைப்புடன் பேனரை வைத்தது. பாஜக தலைமையிலான கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற நிலையில் முற்போக்கு எனும் வார்த்தை சேர்க்கப்பட்டிருந்தது. பாஜகவின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என அறிவித்த ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம் ஆகியோரின் படங்களும் அந்த இடம்பெறவில்லை.

கூட்டணி பெயர்
இதனால், கூட்டணியில் இருந்து பாஜக உள்ளிட்ட கட்சிகளை எடப்பாடி பழனிசாமி கழற்றிவிட முடிவெடுத்துவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்தன. பின்னர் எடப்பாடி பழனிசாமி தடாலென பல்டி அடித்தார். சில மணி நேரங்களில், "தேசிய ஜனநாயகக் கூட்டணி" என மாற்றப்பட்டது. அதிமுக மூத்த தலைவர்கள் முந்தைய தலைப்பு அச்சுப் பிழையால் ஏற்பட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக அண்ணாமலை கூறினார். பின்னர் மீண்டும் அந்த பேனர் மாற்றப்பட்டு அதிமுக தலைமையிலான கூட்டணி என வைக்கப்பட்டது.

5வது முறையாக
ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனை பேனர் 5-வது முறையாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்களுடன் தேர்தல் பணிமனையில் ஈபிஎஸ் அணி பேனர் வைத்துள்ளது. பிரதமர் மோடியின் முழு உருவப் படமும், அண்ணாமலையின் ஸ்டாம்ப் சைஸ் படமும் இடம்பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு என பேனரில் இடம்பெற்றுள்ளது.

இன்னும் எத்தனை?
ஏற்கனவே 4 முறை மாற்றி அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மோடி, அண்ணாமலை படங்கள் இடம்பெறவில்லை. தற்போது 5வது முறையாக அமைக்கப்பட்டுள்ள பேனரில் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட்டணியின் பெயரை பேனரில் குறிப்பிடவில்லை. இன்னும் வாக்குப்பதிவுக்கு இரண்டு வாரங்களுக்கும் மேலே இருப்பதால், இன்னும் எத்தனை முறை பேனர் மாறுமோ என அதிமுகவினரே முணுமுணுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications