எடப்பாடியுடன் ஒன்றரை மணி நேரம் ஒன்றாக பயணித்த வேல்முருகன்.. கூட்டணி காட்சிகள் மாறுகிறதா?
ஈரோடு: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்து ஒரே விமானத்தில் தவாக தலைவர் வேல்முருகன் பயணித்திருப்பது தெரிய வந்துள்ளது. தவாக வேல்முருகன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமியுடன் அருகே அமர்ந்து பயணித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.
2021 சட்டசபைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இணைந்தார். உதயசூரியன் சின்னத்தில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வேல்முருகன் வென்றார். திமுக கூட்டணியில் இருந்தாலும், தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வந்தார். சட்டசபையில் சபாநாயகர் முன் நின்று வேல்முருகன் போராட்டம் செய்தது ஸ்டாலினை கோபப்படுத்தியது.

இதையடுத்து வேல்முருகன் கடந்த சில மாதங்களாகவே அமைதி காத்து வருகிறார். தொடர்ந்து திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று அவர் கூறி வந்தாலும், இம்முறை அவர் கூட்டணியில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தவாகவுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வேல்முருகன் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேல்முருகன் விமானத்தில் வந்தார். அந்த விமானத்திலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வந்திருக்கிறார். இதையடுத்து இருவருமே அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசி வந்துள்ளனர். இதனால் வேல்முருகனை அதிமுக பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த நூல் வெளியீட்டு விழாவிற்காக விமானத்தில் வந்த போது, எதிர்க்கட்சித் தலைவருடன் அருகில் அமர்ந்து பயணிக்கும் சூழல் இயற்கையாகவே அமைந்தது. அந்த பயணத்தின் போது தனது ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கு செய்த விஷயங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், மாணவர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
அந்த அடிப்படையில் திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் மக்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு நலத்திட்டங்கள் செய்திருக்கிறீர்கள் என்று கூறினேன். இதன்பின் விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட இருந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். இந்த பயணத்தில் அவருடன் ஒன்றரை மணி நேரம் வரை பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியின் எண்ணங்கள் குறித்த அறிய முடிந்தது. தமிழ்நாடு முன்னேற்றம், கல்வி, விவசாயிகள் உள்ளிட்டவை குறித்து பேசியது மன நிறைவாக இருந்தது. நாங்கள் இருவரும் சட்டசபையில் ஒன்றாக செயல்பட்டு வருகிறோம். இதில் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications