ஜவுளி ஆலையின் மின் இணைப்பு துண்டிப்பு.. கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றி வந்ததால் அதிரடி ஆக்ஷன்!
ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய தனியார் தொழிற்சாலைக்கு மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் கழிவுநீர் இஷ்டத்திற்கு வெளியேற்றப்படுவதாக கடந்த சில மாதங்களாக அதிகளவில் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனம், கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியதை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து கடந்த 16ஆம் தேதியன்று, சம்பந்தப்பட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் 2 நாட்கள் அங்கு ஆய்வு நடத்தி, கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதை உறுதி செய்தனர்.
பாயிண்ட் டெக்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் சட்ட விரோதமாக கழிவு நீரை சுத்திகரிக்காமல் பக்கவாட்டு சுவர் வழியே வெளியேற்றியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த ஜவுளி ஆலைக்கு மின்சார இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பை துண்டித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் விதிமுறைகளை மீறிய புகாரில், 8வது ஆலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications