சீமானுக்கு எதிர்ப்பு.. போராட்ட களமான ஈரோடு.. ஈவிகேஸ் இளங்கோவன் வீடு அருகே பரபரப்பு
ஈரோடு: பெரியார் குறித்து அவதூறகப் பேசியதாகக் கூறி, ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரசாரம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மூன்றாண்டுகளில் அங்கு இரண்டாவது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது.

திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும் செய்தி தொடர்பு இணைச் செயலாளருமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த இடைத்தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.
அதிமுக, பாஜக கட்சிகள் இந்த இடைத்தேர்லை புறக்கணித்துள்ளன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் களம் திமுக Vs நாம் தமிழர் என்று மாறியுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபகாலமாக பெரியாருக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். ஈரோடு பெரியாரின் சொந்த மாவட்டம் என்பதால் திமுக கூட்டணி அங்கு அவருக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.
சீதாலட்சுமியை ஆதரித்து ஈரோடு கிழக்குத் தொகுதியில் சீமான் நேற்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோட்டில் சீமான் தங்கியிருந்த ஹோட்டலை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொடர்ந்து சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் காளை மாட்டு சிலை, கச்சேரி வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதேபோல மாநிலம் முழுவதும் உள்ள அந்தக் கட்சியின் நிர்வாகிகள் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை ஈரோட்டில் உள்ள முன்னாள் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக அக்கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக வேட்பாளர் சந்திரக்குமாரை ஆதரித்து காங்கிரஸ் தொண்டர்களும் துண்டு பிரசுரம் விநியோகித்து வந்தனர். அப்போது இடும்பாவனம் கார்த்திக், பெரியார் மீது விமர்சனம் வைத்தார். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களும் பிரபாகரன் வாழ்க என்று எதிர்ப்பு கோஷம் எழுப்பினர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர், சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரை பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கக கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படியிருந்தும் முன்னாள் எம்எல்ஏ வீட்டின் அருகில் வந்து வேண்டுமென்றே பிரச்னையில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கு காவல்துறை எப்படி அனுமதி வழங்கியது. மேற்கொண்டு சீமானின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தி விலக்கி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications